இல்லாத ஊரில் சொல்லாத கதை
இந்த நகரம்
நரகம் தான்
இல்லை என்பதற்கில்லை
ஆலமரக் கிளிகளும்
ஒற்றையடிப் பாதை
பாப்பாத்தி வண்டுகளும் இல்லை தான்
பார்த்து ரசிக்க
ஆடுகளும் மாடுகளும்
விட்டு வந்த பொட்டல் நிலங்களுமென
தளும்பிக் கிடக்கும் உங்கள்
ஏகாந்த எழுத்துக் கிராமத்தில்
ஏமாந்த புழுக்களாய்
ஊர்ந்து கிடந்த வாழ்வு எங்களுடையது
ஆடுகளாகவும் மாடுகளாகவும்
பிடுங்கி கொண்ட பஞ்சமி நிலங்களும்
தூர்ந்து கிடக்கிறது
எங்கள் எண்ணங்களில்
நீங்கள் பேய்களுக்கும்
உச்சி முனிகளுக்கும்
பயந்து கிடந்த ஊரில்
நாங்கள்
உங்களுக்குப் பயந்து கிடந்தோம்
மறுக்கப்பட்ட கோவில்களும்
தடுக்கப்பட்ட கிணறுகளும்
ஒடுக்கப்பட்ட குரலுமாய்
நடுங்கிக் கிடந்த வாழ்வை விட்டு
இப்படிக் கை வீசி
கால்ச் செருப்போடு
சுதந்திர உலா சாத்தியமாவதால்
இந்த நரகம்
எங்களுக்குப் போதுமானதாகவே இருக்கிறது.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
