நீங்கியதோ இன்பம்

நீங்கியதோ இன்பம்..?

என் இல்லாமல் போனவரே...
ஒரு கையணைப்பில் துள்ளிய மனது,
கையசைத்து நீ விடைபெறுகையில்
விண்டு தான் போனது......

விடியலில் வழியனுப்பி விளக்கேற்றும்
நேரம் நீ வரும்வரை விநாடிகளை
யுகமாக நகர்த்தியபடி வழிமேல் விழி வைத்து
காத்துக்கிடந்தது காதல் மனைவியின் மனது...

மடிந்த பகலில் துளிர்த்து விட்டது இரவு,
நீ இன்னும் வந்து சேராததால்
இருண்டு விட்டது இதுவரை
இதயத்தில் துள்ளல் போட்ட இன்ப நிலா...

கடந்து சென்ற நேரங்களில் கொஞ்சங்கொஞ்சமாய்
கரையத் தொடங்கியது பொறுமை இழந்த மனது..
உயிராய் எனக்குள் இணைந்தவனை..
உயிரை விட மேலாய் நினைப்பதனால்,
தொலைந்த நிமிடங்கள் ரணமாய் துளைத்தன...

ஏதோவொன்று ... என்னவென்று ... எதற்காக....
இனம் புரியாத வேதனை மௌனமாய் மனதைப்
பிசைந்தது.. பிழிந்து எடுத்தது... பிய்த்து போட்டது...
உணர்வை மெல்ல இழந்திடும் வேலையில்
உறுமிய படி வாசலில் நின்றது விதியின் கோரப்பிடி.

இடியாய் தட்டப்பட்ட கதவின் பின்னால்,
ஆயிரம் கனவுகளுடன் நான் காத்திருக்கையில்,
அரைநொடியில் அனைத்தும் முடிந்து போனதாகக் கூறி,
ஆறடி உயரத்தை என் மடியில் சாய்த்துவிட்டது,
விபத்தின் ரூபத்தில் வினையாக வந்த விதி.

ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்..
எவரோ சொன்னது என் வாழ்வினைக் குறித்துதானோ..?
மோகம் முப்பதைத் நெருங்குவதற்குள், நீ
போட்ட மூன்று முடிச்சு, தானாகவே விலகிட
நான் செய்த பாவம் என்ன ...?
சொல்லாமல் நீ சென்றுவிட்டதால்,
கொல்லாமல் எனைக் கொல்லுதே உற்றமும் சுற்றமும்.

பூவை, பொட்டை, மஞ்சளை , வர்ணங்களை..
எதை வேண்டுமென்றாலும் நான் இழக்க தயார்..
ஆனால்..............
நீ தொட்டு கட்டிய மாங்கல்யத்தை மட்டும் கழற்றிட
வேண்டாமென்று சொல்லிவிடு என் ஆத்மாவின் நாயகனே...
உன் மனைவியாக காலம் முழுதும் வாழ்ந்திட
இதைத் தவிர வேறு ஆதாரம் எனக்கில்லையே....
கண்ணீருடன் எழுதும்,
உன் நினைவால் துவண்டு போயிருக்கும் உன்னில் பாதி...

(கணவன் இறந்த பின் மனைவியின் மாங்கல்யத்தை கழற்றி மூலியாக்கி பார்க்கும் இந்த சமூகத்தில் என் பார்வை ஏற்றுக்கொள்ளப்படுமா.. .....?)

பெ.மகேஸ்வரி

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (15-Jan-14, 7:24 am)
பார்வை : 141

மேலே