தமிழா - ஒன்றுபட்டு உழைத்து உயருவோம் எழுகவே

தமிழன், செந்தமிழின் செழுமை தன்னை
ஆழிபேரலை தழுவி குமரியோடு அழிக்க
ஆங்கிலேயனும் அறிவியல் தொழில்நுட்பம் தந்து
தமிழ் மொழிதனை அழித்தது தகுமோ!

எவ்விதத்தில் யாம் இழிவு இவ்வுலக இனமுன்
குறளும் சிலம்பும் கல்லனையும் மல்லையும்
காலங்காலமாய் நம்முடன் உயிர் வாழ
சித்தமருந்துடன் செந்தமிழ் பள்ளியை நாம் ஒதுக்கியது தகுமோ!

சீனனும், அரேபியனும் ருஷ்யனும் ஜெர்மனியனும்
அவன் மொழியில் மருந்தும் பொறியியலும் வடிக்க
கை தொலைபேசியிலும் காகிதத்திலும் எழுத
ஆதிதமிழ் யிங்கே இரவல் கேட்பது தகுமோ!

நாய் குட்டி பூனையாக கத்த
தாய் நாய் அதை ஏற்குமோ?
தமிழ் மகன் ஆங்கிலம் உளற
தமிழ் மகள் மகிழ்வது தகுமோ!

ஆங்கில போதையில் நா நடனமிட
நம்மை அழிக்கவா நாம் பிள்ளை வளர்ப்போம்
அன்னை தமிழை திண்ணையில் புதைத்து
ஆங்கிலத்தை தலைமீது சுமப்பது தகுமோ!

உலகம் விரவி உழைக்கும் தமிழா
யாதும் ஊரே; நம்மொழி வழி நின்று
தமிழ்மொழி ,கலாச்சார இனங் காக்க - தமிழா
ஒன்றுபட்டு உழைத்து உயருவோம் எழுகவே!

அன்புடன்
ரா.சிவகுமார்
16 சனவரி 2014

எழுதியவர் : siva71 (16-Jan-14, 3:08 pm)
பார்வை : 74

மேலே