ஏற்றம் ஏற்றம் ஏமாற்றம்

பற்றற்று இருந்த என்னை
பற்றுதல் வேண்டி பெற்றவர்
மணமுடித்தார்

உற்றவன் துணை கொண்டு
பெற்றெடுத்தேன் ஒரு மகவை
உதிரத்தை அமுதாய் தந்தே வளர்த்தேன்
ஸ்பரிசத்தில் கெடந்தேன்
பாசத்தால் நெளிந்தேன்

ஒன்று போதுமென ஒதுங்கியதாலே
உற்றவன் எனை வெறுத்தானே
தனிமையில் தவித்த போதும்
மன உறுதியில் வாழ்கின்றேன்

வசதிகள் மிகுதியில்லை
வறுமைகள் நிலை கண்டு கலங்கவில்லை
என்பிள்ளை ஏக்கத்தை போக்கிடவே
தூக்கத்தை தொலைத்து
வயல்வெளியிலும்
பலர் வீட்டு வேலை செய்தே
பிழைத்தேன் உழைத்தேன்

கேட்டதை கொடுத்து கல்வி ஞானம்
பயின்றிட செய்தேன்
உயர்நிலை படிப்பு கேள்வி குறியாய்
ஆனா போது வீறு கொண்டு உழைத்தேன்
வீட்டில் இருந்தவற்றை விற்றேன்

மேல்நிலை படிப்பு வந்த போதும்
சின்ன குழந்தை போல் அடம் பிடிப்பான்
அம்மா என்றே குரல் கேட்டால்
அடிவயிறும் கலங்கிடுமே

பிள்ளை பாசத்தால் பல
தொல்லைகள் கடந்து விட்டேன்
நல்லமகவை எண்ணியே
பலர் கால்களில் என் சிரம் பதித்தேன்
கடன் பெற்று இருந்ததை அடகு வைத்து
கரை ஏற்றிட துடித்தேன்

பலர் கருணையால்
பலித்தது என் எண்ணம்
கல்லூரி முடிந்தது
கட்டியணைத்தேன்
முத்தமிட்டேன்
அதற்குள் என் உடலும் களைத்தது
மேனியும் குலைந்தது

செல்லமகன் இருக்க ....
கவலை இல்லை எனக்கு
வருடங்கள் ஓடிட
வாசலில் நிழல் வந்து ஆடிட ...

செல்லமகனை கண்டு
நடுங்கிய மேனியும்
தெம்பாக்கி அன்பு குரலில்
அழைத்தேன் மகனே....

மகனும் தோழ்சாய
நானும் தோழ் சாய்ந்தேன்
மறுபுறம் நிழலாட
சட்டென்று நிமிர்ந்தேன்

மகனை நான் பார்க்க
மெதுவாய் கண் அசைத்தான்
புரியாமல் நான் தவிக்க
பெண்ணொருத்தி மெதுவாய்
உள்நுழைந்தால்
என் உள்ளத்தில் பெரும் குழப்பம்

செல்லமகன் எனக்கு துணையாய்
இருப்பாளென்று துணையுடன் வந்தானோ
உடன் படிக்கும் பெண் தானோ
நட்பாய் இருந்தால் தப்பாய் போய்விடும்
ஆதலால் கேட்கவில்லை

சில மணித்துளி மௌனமாய் நகர்ந்தது
மெதுவாய் வந்து என்மடி சாய்ந்து
அம்மா ...என்று மெதுவாய் அழைத்தான்

பெண்ணை கை கட்டி
பிடித்திருக்கா என்று எனை கேட்டான்
அடிவயிறு கலங்கினாலும்
அன்பு மகன் ஆசைக்கு மறுப்பு ஏது

காதலென்று சொன்னான்
பெரும் வசதியென்றும்
வாழ்ந்தால் இவளுடன்
இல்லையேல் மண்ணுடன்
என்றெல்லாம் ஏக வசனம்

நான் என்ன சொல்ல
பிள்ளையை பெற்றவர்க்கு தானே
பெரும்பாடு
காதல் உங்களுக்கு
கஷ்டம் எங்களுக்கு
இஷ்டம் என்றாலும்
இல்லைஎன்றாலும்

பேசு பேசினால் தானே முடிவு
எல்லாம் சுமூகம்
சமூகங்கள் ஒன்றாய் சேர்ந்தே
ஒற்றை மகனை பெற்றிருக்க
விருந்தோம்பல் வலுவாய் இருக்கட்டும்

என்மகனும் எல்லாம் பெரிய இடம்
எப்பாடு பட்டேனும்
விருந்தோம்பல் சிறப்பாய் செய்...
அன்பு கட்டளை போட்டனே

அடமானத்தில் அத்தனையும்
பிடிமானத்தில் ஒன்றுமில்லை
என்ன செய்வேன் என எண்ணுகையில்
இருப்பது ஒரு வீடு
வேறு வழியேது

அவசரத்திற்கு விலை கேட்டால்
அரையாக கேட்கின்றான்
அதையும் அடகு வைத்து
போதவில்லை மணமுடிக்க
வேறு வழியன்றி இருக்கும் போது
பெண் வீட்டார் உதவிடவே
திருமணமும் நடந்தே முடிந்தது

விருந்துகள் எல்லாம் முடிந்து விட
தனிமையில் நானும் இருந்து விட
அருகில் வந்தான் அன்பு மகன்
மெதுவாய் சொன்னான்
அவளால் இங்கு இருக்க முடியாது
வசதியாய் வளர்த்தவள்
அதனால்....

அவளும் நானும் அவளது வீட்டில்....
தங்கி விடலாமென்று....
தயங்கி ...தயங்கி ...
அவன் வாய் சொல்லி முடிப்பதற்குள் ...
என் உயிரும் ....பிரிந்தே போனதே...

எழுதியவர் : (13-Feb-14, 5:14 pm)
பார்வை : 249

மேலே