அவளுடன் ஆவலுடன் - கே-எஸ்-கலை

புல்லாங்குழலும்
யாசிக்கும் அக்குரலில்
புள்ளினமும்
இசைகேட்க யோசிக்கும்,
அந்தச் சோலையில்
அந்தி மாலையில்
மலையடியில் பகலவன்…
அவள்மடியில் நான் !
புள்ளினமும்
பூவினமும் சொக்கிநிற்க
கள்ளுண்ட
இளமேனி தள்ளாட
பள்ளியறை வாயில்கள்
பவ்வியமாய் தாழிட
பஞ்சணையில் நான்...
நெஞ்சணையில் அவள் !
விறைக்கும் குளிர்
துளிர்க்கும் நரம்புத் தளிர்
பால் வார்க்கும் பேச்சு,
தோள் கோர்க்கும் மூச்சு
சுவாலையாய் அவள்...
துவாலையாய் நான் !
மயிர்ச் செடிகள் சிலிர்க்க
உயிர்த் துளிகள் துளிர்க்க-
நாணி நெளிந்தாடும்
மெழுகொளி - சொர்கத்தில்
வழிந்தோடும் நீர்த்துளி !
வெட்கத்தில் அவள்...
வெப்பத்தில் நான் !
தேனாற்றில்
தத்தளிக்கும் தெப்பம்
தேடித்தேடி
முத்தெடுக்கும் வெப்பம் !
மேகத்திரை விலக்கும் நிலவு
மோகக்கரை கடக்கும் கலவு
வேர்வையில் அவள்....
வேட்கையில் நான் !