காது கிழிக்கும் ஓலம் 0தாரகை0

என் மனம்
அமைதியற்று
இங்குமங்கும்
அலைந்துகொண்டிருக்கிறது.

என் சந்தோசங்கள்
எவராலோ முடிவெடுக்கப்படுகிறது,,,
என் தேவைகள்
யாராலோ தீர்மானிக்கப்படுகிறது,,,

நான் நானாக
இருப்பதில்லை பெரும்பாலும்,
சில சமயங்கள் அமையும் பொழுதும்
என் மனம் விடுவதில்லை.

கிடைத்தவைகளெல்லாம்
வேண்டாமென்கிறது.
கிட்டாதவைகளையே
வேண்டி வேண்டி.

இருப்பவர்களை
ஏறிட்டும் பார்க்காமல்
இல்லாதவர்களுக்கான
ஏக்கப் பெருமூச்சு.

அக்கறை காட்டுவோரை
புறக்கணித்து
உதாசீனப்படுத்துவோரோடு
உறவாடிட ஆசை.

மனதின் வினோத போக்கு
விபரீத போக்கென்று தெரிந்தும்
விரும்பியே வேண்டியே
அமைதி குலைக்கப்படுகிறது.

தனிமையில்
அமர்ந்தும் குழப்பங்கள்
சூழ்ந்துகொள்கிறது.

ஆள் அரவமற்ற
இடங்களில்கூட
மனம் எழுப்பும் ஓலம்
காது கிழிக்கிறது.

எங்கோ எனை
அழைத்துச் செல்லுகின்ற
என் மனம் என்னையே
திரும்ப திரும்ப கேட்கிறது
எங்கே என்று???

என்னை கவ்விப் பிடித்த
என் மனத்தை
கவ்விப்பிடித்தது எதுவென்று
என்னிடம் கேள்வி
எழுப்புகின்றது.

பதிலை தேடித்தேடி
குழப்பக்குளத்தில்
முங்கி எழுகின்றேன்
இடியாப்ப சிக்கல்
வாழ்க்கையில் சிக்குண்டு

முடிவிலியாய்
தொடர்ந்து
போய்கொண்டிருக்கிறது.
இதற்கு பெயர்தான்
வாழ்க்கையா?

எழுதியவர் : தாரகை (5-Apr-14, 10:44 am)
பார்வை : 109

மேலே