கடல் மேல் ஒரு காதல்
அலை கடலே உன் அன்பெனும் அலைக்குள்
அரை நொடியேனும் வாழ்ந்திடுவேன்..
ஒளி தரவே அந்த மதி மயக்கும்
மங்கள திங்களை அழைத்திடுவேன்..
ஒளிரும் கதிரவன் உனக்குள் கரைவதை
ஒருமுறை நானும் பார்த்திடுவேன்..
தென்றல் வந்து தவழ்ந்திடவே நீ- அலையாய்
தெறிக்கும் அழகைக்கொஞ்சம் ரசித்திடுவேன்..
புயல் வந்து தொட்டிடவே உன்
பொங்கும் கோவம் கண்டிடுவேன்..
கடல் நடுவே மிதந்து வந்து
கானம் ஒன்றைப் பாடிடுவேன்..
கரை வந்து அழைத்திட்டாலும் என்
காதல் நீயே என்றிடுவேன்..
உலகம் என்னை உதறிட்டாலும்
உன்னை எண்ணி இறந்திடுவேன்..
உனக்குள் வாழ்ந்து மகிழ்ந்திடவே
மீண்டும் நானும் பிறந்திடுவேன்..
மீனாயேனும் வாழ்ந்திடுவேன்!!