பூனை மனம்
பிராணிகளில்
மிகவும் பிடித்த்து
பூனை.
பூனை குறித்து
இகழ்ச்சி கூறின்
தீப்பந்தம் ஏந்தும் மனசு.
அம்மா எப்போதும்
சொல்கிறாள்
சப்தமாய் சிரிக்காதே
அதிர்ந்து நடக்காதே
உரக்கப் பேசாதே
இன்னும் இன்னும் நிறைய
எப்படிச் சொல்ல
பூக்கட்டும் இலாவகத்தைவிட
எளிதானது
போருக்கு தலைமை ஏற்பதென
பூனை
ரொம்பவும் பிடிக்கும்
மென்மை கருதி மட்டுமன்று
அதனுளிருக்கும்
வன்மம் வேண்டியும்.