பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்

எல்லா உயிரும் ஒன்றெனப் போற்றும்
வல்லான் நெறியை வள்ளுவர் காட்டினார்!
கல்லா மாந்தர் கெடுமதி கொண்டே
பொல்லா வினையால் பேரழிவு நாட்டினார்!

ஓடுகின்ற குருதியிலே எவ்வுயிரும் ஒன்றன்றோ!
பாடுகின்ற நல்லறங்கள் சாற்றுவதும் அதுவன்றோ!
மூளுகின்ற பகையாலே நன்னிலைதான் தோன்றிடுமோ!
மூடராய் வாழ்வதில்தான் பயனேதும் விளைந்திடுமோ!

வாழுகின்ற உயிர்களிலே உயர்வுதாழ்வு உண்டோடா?
பாழ்சிந்தனை கொண்டுநீ அலைவதும் நன்றோடா?
காழ்ப்புணர்ச்சி கொள்வதால் மானுடம்தான் மாண்புறுமோ?
தாழ்ச்சியுற்று இவ்வுலகில் வாழ்வதும்தான் முறையாமோ?

சாதியெனும் பெரும்பேயை விரட்டிடவே முடியாதோ
நாதியற்ற வேளையிலும் அந்நினைவும்தான் மறையாதோ
வேரறுக்கும் மறச்செயலாய் வேற்றுமைகள் சூழ்ந்திருக்க
பார்போற்றத் தமிழனும்தான் தலைநிமிர்ந்து வாழ்வானோ!

எழுதியவர் : குழலோன் (2-Jun-14, 8:52 pm)
பார்வை : 201

மேலே