நன் ஒரு பைத்தியக்காரன்

ஏன் என்னை
பார்த்து சிரிக்கிறீர்கள்
நானும் உங்களை போல்
ஒரு மனிதன்தான்

சொல் கொண்டு என்னை
வையாதீர்கள்
நானும் சொல் புரிந்த
ஒரு ஜடம்தான்

கல் கொண்டு எறிகிறீர்களா
பருவாயில்லை
என் தேகம் மரத்துப்போய்
பல வருடங்கள் கடந்துவிட்டன

இல்லை இல்லை
உங்கள் பழைய துணிகளை எரிக்க வேண்டாம்
என்னிடம் தாருங்கள்
நான் அதனை அணிந்துகொள்கிறேன்

காகத்திற்கு படையல் வைத்து
நீங்கள் பூசிக்க வேண்டாம்
இதோ நான் உங்கள் கால் அடியில் நிற்கிறேன்
என்னை ஏறெடுத்து பாருங்கள்
நானும் பல நாள் பட்டினியாய் இருக்கிறேன்

நிழலுக்காகத்தான் உங்கள்
கூரைக்குள் ஒரு கணம் புகுந்தேன்
இதோ நானே போய்விடுகிறேன்
என்னை விரட்ட வேண்டாம்

இன்றே உங்களை பதிவு செய்யுங்கள்
அந்த ஆறடி புதைகுழிக்கு
வேறொரு இடத்தில்
ஏனெனில்
அங்கும் என்னையும் உங்களையும்
அருகில் அடக்கம் செய்தால் ................!

பாவம் நீங்கள் எங்கே போவீர்கள்
சமத்துவம் அங்கேயும் வந்துவிட வேண்டாமே ............?

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (27-Jun-14, 3:05 pm)
பார்வை : 152

மேலே