++++அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தரமும் உயர++++

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தரமும் உயர....
தனியார் பள்ளிகள் குறைவாக இருந்த காலத்திலே அரசுப் பள்ளிகளில் மட்டும் பயின்று பல சாதனை புரிந்த அறிஞர்களை, விஞ்ஞானிகளை, மேதைகளை நாம் அறிவோம். இன்று தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் பெருகிவிட்ட இந்நாட்களில் நாம் எத்தனை சாதனையாளர்களை உருவாக்குவோம் என்பதை வரும்காலம் தான் நமக்கு எடுத்துரைக்கும்.
எந்த தொழிலிலும், 200 சதவீதம், 300 சதவீதம் லாபம் கிடையாது. பங்குச்சந்தையில் கூட குறியீடு அதிகரிக்கும் போதும் இவ்வளவு அதிக லாபம் கிடைக்காது. ஆனால் இந்திய அளவிலும், தமிழகத்திலும் பள்ளிக்கூடம் நடத்தினால், கல்வி நிறுவனங்கள் நடத்தினால் பலமடங்கு உத்திரவாத லாபம் பெறமுடியும். இந்த நிலையை என்று நாம் மாற்றுவோம்? முடியுமா? புதிய சட்டங்கள் போட்டு தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த முடியுமா? அரசுப் பள்ளிகள் இப்போது இருக்கும் பரிதாப நிலையிலிருந்து பீனிக்ஸ் பறவையாய் மீண்டுமொரு நல்ல நிலை பெற்று மாணவர் சேர்க்கையிலும், தரத்திலும் முன்னேற்றம் காண முடியுமா?
அரசின் சில நல்ல திட்டங்கள் நிறைவேற ஒவ்வொரு தனி மனிதனின் அர்ப்பணிப்பு உணர்வும், ஈடுபாடும், அக்கறையும் இன்றியமையாதது.
மாணவர் சேர்க்கை குறைய காரணம்:
மாணவர் சேர்க்கை அரசுப்பள்ளிகளில் குறையக் காரணம் என்ன என ஆரோய்ந்தோமானால் இவ்வாறாக வரிசைப்படுத்தலாம். தனியார் பள்ளிகளின் எழுச்சி, ஆங்கிலவழிக் கல்வியின் மேல் மக்கள் கொண்டுள்ள மோகம்,
தனியார் பள்ளிகளை கணக்கின்றி வளர்த்துவிட்ட அரசாங்கம்,
தம் பிள்ளைகளை எவ்வளவு பணம் கொடுத்தும் பெரிய பெரிய பள்ளிகளில் சேர்த்துவிடும் பெற்றோர்களின் வறட்டு கௌரவம், சிறிது சிறிதாக குறைந்து போன அரசு பள்ளிகளின் தரம்.
அரசுப்பள்ளிகளின் தரம் குறைய காரணம்:
பணி நேர்மை, பணி அர்ப்பணிப்பு குறைந்து போனது:
அரசுப்பள்ளி ஆசிரியர்களில் பலரும் வட்டிக்கடை உட்பட பல்வேறு உபதொழில்களைச் செய்பவர்களாக இருப்பதையும், இவற்றில் ஈடுபாடு காட்டும் அளவிற்கு தம் ஆசிரியப்பணியில் இவர்கள் ஈடுபாடு காட்டுவதில்லை என்பதையும் நாம் மறந்துவிடலாகாது.
திறமையிருந்தும் வெளிப்படுத்த தயங்கும் ஆசிரியர்கள்
சீரான கண்காணிப்பு இல்லாத அமைப்பு முறை என சிலவற்றை வரிசைப்படுத்தலாம்.
தரமும் மாணவர் சேர்க்கையும் உயர செய்ய வேண்டியவை:
முன்பருவக் கல்வியையும் உடன் கொண்டு வருதல், காலிப்பணியிடங்கள் இன்மை என்ற நிலை உருவாக்குவது,பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களின் பிள்ளைகளும் பயிலும் பள்ளிகளாக அரசுப்பள்ளிகள் உருவெடுக்க அனைத்து அரசு பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, மாணவர்களின் உடை, சுகாதாரம், சுற்றுப்புறச் சூழல் போன்றவை மேம்படுத்தப்பட வேண்டும்.
அயல் நாடுகளில் உள்ளதைப்போல குறிப்பிட்ட பகுதியில் உள்ளோர் குறிப்பிட்ட பகுதியில் உள்ள பள்ளியில் தான் பயில வேண்டும் என்கின்ற அருகாமைப்பள்ளி திட்டம் சட்டமாக்கப்பட்டால் அரசுப்பள்ளிகளின் மீது கவனமும் அக்கறையும் கூடி அரசு பள்ளிகள் மேம்படும்.
தனியார் பள்ளிகளை நகலெடுக்க கூடாது:
புரிதல், ஆய்தல், பயன்படுத்துதல், புதிய சூழலில் செயல்படுதல், புதிய முயற்சி, புதிய கண்டுபிடிப்பு, கற்பனைத்திறன் மேம்படுத்துதல் போன்ற பன்முக ஆளுமைத்திறனுக்கு வாய்ப்பற்று சமூக நிர்ணயமான, எழுத்து வழித்தேர்வில் அதிக மதிப்பெண்கள் என்பதை மட்டுமே நோக்காக கொண்டு எப்போதும் தேர்வு, திருத்துதல், சில பாடவேளைகளில் எடுக்கப்பட்ட பாடத்திற்கு, பல பாடவேளை மனனத்திற்கு மட்டுமே பயிற்சி, என்பன பள்ளிகளில் பெரிதும் நடைபெறுவதால் அந்த இயந்திரத்தனத்தை அரசு பள்ளிகள் கண்டிப்பாக நகலெடுக்க கூடாது.
முதலில் தங்களது குழந்தைகளை ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும், அரசியல்வாதிகளும் அரசுப்பள்ளிகளில் சேர்க்க முன்வருவார்களா என்பதைப் பார்க்க வேண்டும்.
தனியார் பள்ளிகளைப் போல அரசுப்பள்ளிகள் விளம்பரப்படுத்த முடியாது.
நன்றாக படிக்கும் மாணவர்களை மட்டும் வைத்துக்கொண்டு படிக்காத மாணவர்களை பள்ளியை விட்டே அனுப்ப முடியாது.
நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களை எல்லாம் பல சலுகைகள் அளிப்பதாக கூறி ஊர் ஊராகச் சென்று அள்ளி வர முடியாது.
தனியார் பள்ளிகளைப்போல ஆசிரியர்களையும், மாணவர்களையும் நினைத்த நேரமெல்லாம் பள்ளிக்கு வரவழைத்து, ஆசைப்பட்ட போதெல்லாம் பரிட்சை வைத்து அனைவரையும் கஷ்டப்படுத்த முடியாது.
இத்தனை முடியாதுகளை வைத்துக்கொண்டு பள்ளியின் தரத்தையும் மாணவர் சேர்க்கையையும் உயர்த்தமுடியும் என்று அரிதியிட்டும் சொல்லமுடியாது.
சிறிது சிறிதாக வேண்டுமானால் முயற்சிக்கலாம்.
தனியார் பள்ளிகள் மக்கள் மனதில் கொண்டுள்ள மாயையை சிறிது சிறிதாக மாற்ற முயற்சிக்க வேண்டும். இது ஒரே நாளில் நடந்துவிடாது.
இதற்கு முக்கியமாக அயராது உழைக்கும் பல நல்ல உள்ளங்கள் தேவை.
அவர்கள் மூலமாக முடிந்தவரையில் முயற்சி எடுத்தால் கண்டிப்பாக ஒரு நாள் நாம் விரும்பும் மாற்றம் நமக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
எனினும் இத்தனை தடைகளையும் தாண்டி, சூழல்கள் அற்ற சூழல்களிலும் சூழல்களை உருவாக்கி கல்வியின் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களால் தான் முடியும். இதற்கு அரசின் ஊக்குவிப்பும், சமூக ஒத்துழைப்பும் வெகு முக்கியம்.
"சரியோ தவறோ சூழல் மாற்றத்திற்குட்பட்டு தம்மை தக்கவைத்துக் கொள்ளாதது அழிந்து போகிறது", என்பது டார்வினின் கூற்று.
அரசுப்பள்ளிகள் என்றால், மோசமாகத்தான் இருக்கும், ஆசிரியர்கள் ஒழுங்காக சொல்லிக்கொடுக்க மாட்டார்கள், போதிய வசதிகள் இருக்காது என்பது போன்ற நம்பிக்கைகள் மக்களின் மனதில் இருந்து முற்றிலும் போக்கப்பட வேண்டும்.
முயன்றால் முடியாது ஒன்றுமில்லை..
முயற்சிப்போம் மாற்றிக் காட்டுவோம்...
நன்றி.