தோழிமார் கவிதை

கொடுக்கவும் ஏதுமின்றி
பெறவும் ஏதுமின்றி ....
வெறுமைகளை சுமந்தபடி
கனமாய் பயணிக்கிறது -லேசான என் இதயம்
இதுவரை.............
உன்னோடு பேசிய மொழிகளில்
வார்த்தைகள் ஒருபோதும்
ஊமையானதில்லை -ஆனால்
உன்னை பார்க்கையில் உன்
காதல் பார்வையிலும்
கள்ளசிரிப்பினிலும்
ஒளிந்து கொண்டதடி. - என்
ஒட்டுமொத்த உயிர்த்துடிப்பும்....
வா என்று சாதாரணமாக
அழைத்துவிட்டாய்
போய்வா என்று சொல்லும்
ஒற்றை வார்த்தைதான்
சதா ரணமாக
உயிர்க்கூட்டை உறங்கவிடாமல்
உருக்குதடி ...............!!!
அருகருகே இருந்தும்
நெருங்கிவிடாமல் காயும்
நிலவும் வானுமாய்
நானும் நீயடி..............!!!
உன்
மொழியிலும் விழியிலும்
மாயம் என்ன செய்தாயோ.....
பார்வையிலும் வார்த்தையிலும்
உயிர் மெய்யாய் உருகி
கரையவும் செய்துவிடுகிறது
என்னை
உன் உயிரோடு உயிராக...................
ஆயுள் நாட்களின்
அளவீடு தெரியவில்லை -என்
ஆயுளை நீட்டிக்க -உன்னுயிர்
அமுதம் கொஞ்சம் தந்திடடி
எதிர்கால நாழிகையை
தின்று தின்று செரிக்குதடி
தொலையாத
உன் ஞாபகங்கள் .......
துரத்தவும் மனமில்லை
தொலைக்கவும் மனமில்லை
தொலைந்துதான் போவேனோ - உன் உயிரில்
கலந்து நான் வாழ்வேனோ
வரம் கேட்டு நிற்குதடி
வருவாயோ என் மடிமீது ......................!!!
கவிதாயினி நிலாபாரதி