நான் தந்தது எனக்கு திரும்புகிறது

இணயத்தில் தேடியெடுத்து
நடிகைகளின்
பள்ளங்களையும் மேடுகளையும்
நண்பர்களிடம்
பகிர்ந்தேன்.

குமரிகளின்
குறும்படங்களை
வாட்ஸப் குழுக்களிலும்
அனுப்பினேன்.

பெண்கள் எவரேனும்
எதிர்வரில்
மதிப்பெண்கள் தர
அவர்களை பொருள்களாய்
பாவித்தேன்.

நண்பர்கள் ரசித்தார்கள் .
ரசிக்க ரசிக்க தேடினேன் .
தேடித்தேடி கொடுத்தேன் .
மகிழ்வித்தேன்.
மகிழ்ந்தேன் .

பின்னொரு நாள்
நான் தங்கைகளோடு
கடைத்தைருவில்
நடந்தபோது
நண்பன் ஒருவன்
எதிரில் வர....

ஹாய் என்று
ஆங்கிலம் கலக்க
அரைமணி நேரம்
அளந்தான் .

அளப்பு முழுக்க
அவன் கண்கள்
அளந்தபடி
அலைந்து கொண்டிருந்தது.!

குற்றவாளி
யாரென்று
சட்டென்று
புரிந்தது.!

எழுதியவர் : ராம்வசந்த் (5-Aug-14, 2:05 pm)
பார்வை : 202

மேலே