அம்மா உனக்காக ஒரு கவிதை

அம்மா உனக்காக ஒரு கவிதை

எங்களைப் படைத்த பிரம்மா..
படைத்தல் மட்டுமா??
காத்தலும்தான் கடமையாக
தூக்கத்தையும் இழந்து...

ஆண் ஒன்றும் பெண் மூன்றாய்
நான்கு முத்துக்கள்
அத்தனையும் மின்னுகிறது
மின்னும் பெருமை உனக்குத்தானம்மா...

எத்தனை துன்பத்திலும்
வளர்த்து ஆளாக்கினாயே
கதவை தாளிட்டு வறுமை மறைத்து
கஞ்சி உண்டதை யாரறிவார்??

காலன் தந்தையை கவர்ந்தும்
யாரிடமும் கை ஏந்தவில்லையே நீ
நமக்கிருந்த கொஞ்சத்திலும்
இல்லாதோருக்கு ஈந்து மகிழ்ந்தாயே!!!

அன்று இன்முகத்தோடு ஈந்ததில்
புண்ணியம் அன்றோ சேர்த்தாய்
இன்று எங்களைக் காக்கிறதம்மா
அன்று நீ செய்த தர்மங்கள்!!!

ஈன்ற உன் பிள்ளைகளிடத்தில்
நீ ஒற்றுமையை கற்றுவித்தாயம்மா
இன்னமும் பூக்கள் கூட்டமாய்
வண்ணத் தோட்டமுமாயும் நாங்கள்!!!

எங்களின் ஒற்றுமையையும்
பாசத்தையும் ஊரே பேசுதம்மா
உங்களின் வளர்ப்பினை
உறவெல்லாம் புகழுதம்மா!!!

ஊர் உறவுகளின் பேச்சினில்
நீ பெருமிதம் காண்கிறாய்...
உன்னை அன்னையாய் பெற்றதில்
பெருமை கொள்கிறோம் நாங்களும்...

எங்களை ஈன்றெடுத்த அன்னையே
உன் அன்னை உன்னை இன்று
ஈன்றெடுத்த புனித நாளம்மா
உன்னை போற்றித் தொழுகிறோம்!!!

பொன்னான இந்நன்னாளில்
உன்னை வாழ்த்துதற்கு இறைவனுண்டு
எங்களை வாழ்த்துதற்கு
நீதானே இறைவனம்மா
எங்களையும் வாழ்த்திடம்மா!!!

(25.05.2014 அன்று எங்களுடைய அம்மாவின் 74 வது பிறந்த தின கொண்டாட்டத்தில் நான் அவர்களுக்காக எழுதி வாசித்த கவிதை)

எழுதியவர் : சொ.சாந்தி (8-Aug-14, 10:36 pm)
பார்வை : 746

மேலே