இது தோட்டக்காட்டான் கதை - கே-எஸ்-கலை

இறக்குமதி செய்யப்பட்ட
கொத்தடிமைகளின் உழைப்பில்
ஏற்றுமதி செலாவணி
செழிப்பாக இருப்பதும்,
மாற்றியுடுக்க துணியில்லா
தோட்டக்காட்டான் வாழ்க்கை
புளிப்பாக இருப்பதும்,
விதி எழுதும் கதையாக...

ஒழுகும் குடிசைக்குள்
ஒற்றைக் குப்பி விளக்கோடு
துக்கம் தூங்காமலும்
தூக்கம் தாங்காமலும்
மழைநீரும் கண்ணீரும்
வழிந்தோடும் உடலோடு
சாதலின் பெயர் வாழ்வாக...

மலையேறி இலைக்கிள்ளி
நாடுயர பாடுபட்டும்
விலையேறி உயிர்க்கிள்ளி
தருந்துயரக் கேடுமட்டும்
மலையகத்தான் வாழ்வோடு
விளையாடும் விதியாக...

சாதாரணங்கள் எல்லாம்
அசாதாரண விஸ்வரூபமெடுத்து
விழிமுன் நிற்கிறது...
நிறைவான ஒருவேளைச் சோறும்
அதற்குள் இருக்கிறது !

தொட்டுக் கொள்ள
உப்புமிளகாய்க்கூட இல்லா
காய்ந்த ரொட்டித்துண்டில் ஊறிய
சொற்ப ரத்தத்தையும்...
அரசியலும் , அட்டைகளும்
உறிஞ்சிக் கொள்ள-
காற்று குடித்து வயிர்தள்ளி
காட்சி தருகிறது
அடுத்த தலைமுறைகள் !

தேயிலைத்
தளிர்களைப் போலவே
வளரும்முன் கிள்ளியெறியப்படும்
வரலாறைக் கொண்டது
தோட்டக்காட்டு
குழந்தைகளின் வாழ்வியலும் !

மருந்தில்லா
மருத்துவமனைகளின்
புண்ணியத்தாலும்
மனமில்லா மருத்துவர்களின்
கண்ணியத்தாலும்
எத்தனையோ பிரசவங்கள்
சவங்களாய் மாறிப் போவது
செய்திச் சுருக்கங்களிற்கூட
சேர்த்துக் கொள்ளப்படாத
செய்திகள் !

தேர் வரும் போதும்
தேர்தல் வரும் போதும்
நலன்விரும்பிகள் – தம்
சுய நலன்விரும்பி வருவார்கள் !
ஆடல் பாடல் கூத்தோடு
அவியல் பொரியல் வறுவல் சேர்த்து
அன்னதானம் தருவார்கள் !

அமாவாசை அன்னதானத்தில்
வெளிச்சம் இருக்கும்
அடுத்துவரும் நாளெல்லாம்
அமாவாசையாய் இருக்கும் !

தோட்டக்காடு
எப்போதும் குளிர்ச்சியாகவே
இருக்கிறது- அதனால்
தோட்டக்காட்டான்களின்
வயிற்றிலும் நெஞ்சிலும்
எரியும் நெருப்பு
எவ்வளவு சூடென்பது –
யாருக்கும்
தெரியாமலேயே இருக்கிறது !

எழுதியவர் : வாழ்க்கை (25-Oct-14, 7:48 am)
பார்வை : 93

மேலே