உருகிடும் மருகிடும் உன் நினைவுகள் 0தாரகைo

சில்லிடும் பொழுதுகள் சுடுகிறது
மெல்லிடை மேனியும் மெலிகிறது
கள்வனின் பார்வையில்
துள்ளிடும் பெண் மயில்
அள்ளிடும் உன்கரம் தேடியது - அதை
சொல்லிட மொழியின்றி வாடியது !

கடும்புனலும் பெரிதெனத் தெரியவில்லை
சுடும்தீயும் தீதெனப் புரியவில்லை
படும்பாடே பெரிதென
விடும்மூச்சே கனமென
தடுமாறிப் போகுது என் மனது - பெரும்
பாடாய் ஆனது இப் பொழுது !

கார்காலம் காதலை கூட்டுது
பார்கூட பந்தென சுருங்குது
ஓர் காவியம் பாடிட
தேர் மன்னனைச் சேர்ந்திட
மருகியே கருவிழி கசியுது - உயிர்
உருகியே வழியின்றித் தவிக்குது

சிறுகதையென தொடங்கிய உன் நினைவுகள்
பெரும்புதினமாய் தொடர்ந்திட என் தவிப்புகள்
மறுமுறை பார்த்திட
வரும்தினம் வேண்டியே
அறுபட்ட உறுப்பெனத் துடிக்குது - மனம்
வருந்தியே காலத்தைக் கழிக்குது !

எழுதியவர் : தாரகை (6-Nov-14, 7:38 am)
பார்வை : 188

மேலே