காலத்தை வென்ற வடு காணாமல் போகட்டும்

காலத்தை வென்ற வடு காணாமல் போகட்டும்


சாதிகளை உருவாக்கி
மூடப்பழக்கங்கள் செழித்தோங்கி
ஏற்ற தாழ்வுகள் என்றென்றும்
இமயமாய் உயர்ந்து நிற்க - 4


வித்திட்டு வளர்த்து
நம்மைப் பலசாதிளாய்
பிரித்து வைத்தவர்கள்
நம்மவர்கள் நல்லவர்கள். - 8

அந்நியர் வருகைக்கு
நாம்படைத்த வேற்றுமைகள்
ஆரத்தி எடுத்ததனால்
அவர்களுக்கு அடிமையாய்
நாமாகிப் போகினோம். - 13

வணிகம் செய்ய வந்தவர்கள்
ஆட்சியாளர் ஆனதற்கு
இங்கிருந்த சாதிப்பிரிவுகள்
சாதகமாய் இருந்ததால்

பிரித்தாளும் சூழ்ச்சியை
நம்மிடம் தான் கற்றுக்
கொண்டார்களோ என்னவோ! - 20

சுரண்டிய அவர்கள்கூட
ஆங்கிலத்தை நமக்களித்து
நம்மை இணைத்திடும்
பாலமாய் நின்றதால் - 24

பலதேசங்களாய் சிதறிக்கிடந்த
நாம்வாழும் துணைக்கண்டம்
ஒருதேசம் ஆனதும்
ஆங்கிலக் கல்வி வந்ததும்
நாம்செய்த புண்ணியம். - 29

(தேசப்பிதா மகாத்மாவும்
நேருமகான், அண்ணல்
அம்பேத்கார் போன்றோரும்
கடல் கடந்து சென்று
உயர்கல்வி கற்று வந்து
நாட்டின் விடுதலைக்குப் போராடினர்!
இந்திய மறுமலர்ச்சி
வங்காளத்தில் தோன்றியதற்கும்
ஆங்கிலக் கல்வியே
அடித்தாளம் ஆனது) - 39

ஆங்கிலக் கல்வியும்
இந்திய இலக்கியங்களும்
ஹென்றி டேவிட் தொரொவின்@
ஒத்துழையாமை இயக்க சிந்தனையும் - 43

மோகன்தாஸ் கரம் சந்த் காந்தியை
மகாத்மா காந்தி ஆக்கியதாலே
அண்ணல் காந்தியின்
தலைமையை நாம்ஏற்றோம். - 47


அதன்விளைவே நாம்பெற்ற
விடுதலை வெற்றியும்
எண்ணற்ற வளர்ச்சியும்! - 50

இன்னும் சாதீயக் கொடுமைகள்;
இந்நாட்டில் இருப்பதற்கு
வேரறுக்க முடியாமல்
விருட்சமாய் நிற்கின்ற
சாதியெனும் சகதிகளே! - 55

சாதியைப் பெயருக்குப் பின்னால்
ஒட்டிக்கொண்டு பெருமைப்படும்
கற்ற மேதைகள் அதிகாரிகள்
அரசியல் தலைவர்கள்* - 59


எத்தனை மகான்கள் வந்து
இவர்களைத் திருத்திடுவார்?
ஆறறிவைப் புறக்கணித்தால்
அழியாது சாதிகளும்! - 63

அன்று சாதி அமைப்பை
உருவாக்கிpயவர்கள் என்றோ
காலச்சுவட்டில் கரைந்துவிட்டார்கள்! - 66

இன்னும் சாதிகளுக்கு உரமூட்டி
நாட்டின் ஒற்றுமையையும்
ஒருமைப்பாட்டையும் சிதைப்பவரை
எப்படித்தான் நல்வழிப்படுத்துவதோ
எவரிதைச் செய்வாரோ? - 71

மெத்தக் கற்ற மேதைகளில்
எத்தனைபேர் இதைப் பற்றிச்
சிந்தித்துப் பார்க்கின்றார்? - 74

இயற்கையை அழிக்கிறோம்
என்பதை நன்கு உணர்ந்தும்
சின்னப் பிள்ளைகள் போல்
பட்டாசுப் பேரானந்தத்திற்கு
பணத்தை வாரி இறைக்கும்
உயர்கல்வி கற்ற மேதைகள்
பேராசிரியர்கள் பொறியாளர்கள்
மருத்துவ நிபுணர்கள் அரசியல்வாதிகள்!
மக்களை நல்வழிப்படுத்த வேண்டிய
அதிகார வர்க்கம்! - 83

இவர்களில் எத்தனைபேர்
அர்த்தமற்ற ஓசைக்கும்
கண்ணைப்பறிக்கும் வண்ணங்களுக்கும்
அர்த்தம் கொடுத்து ஆனந்தப்படுவது
அர்த்தமற்ற செயலென்று
வெளிப்படையாய்ச் சொல்வார்கள்? - 89

இயற்கையை அழிப்பது
அழிவினுக்கு நாம் கொடுக்கும்
அழைப்பென்று மக்களுக்கு
ஆணித்தரமாய் அடித்துச் சொல்வாரா? - 93


இவர்களா சாதி அரக்கனுக்கு
சமாதி கட்ட முன்வருவார்?
கசடறக் கற்றவர்க்கெல்லாம்
நல்லதெல்லாம் தெளிவாய்த் தெரியும்! - 97


ஆறறிவு நமக்கிருப்பதை
மறதிப் புதைகுழியில் தள்ளாமல்
பகுத்தறியும் நாமெல்லாம்
இனியேனும் இயற்கையைப் பேணுவோம்! - 101

இந்திய ரெல்லாம் ஓரினம்
என்பதை நிலைநாட்ட
சாதிப் பேய்களை சாக்காட்டிற்கு
அனுப்பிவிட்டு விலங்கினும் இழிந்தவர்கள்
நாமல்ல என்பதை நிலைநாட்டி
காலத்தை வென்று நிற்கும்
இந்தச் சாதி வடுவை
மறையச் செய்யும் மறுமலர்ச்சிக்கு
வித்திடுவோம் வாருங்கள். - 110


@ Henry David Thoreau’s Civil Disobedience
=====================================================
(சமுதாய நலம், இந்தியரின் ஒற்றுமை, ஒருமைப்பாடு செம்மைப்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் எழுதப்பட்டது. சாதி வெறியர்கள் யாரேனும் தமிழர்களில் இருந்தால் அவர்கள் திருந்த வேண்டும், வருந்த வேண்டும் மாற வேண்டும் நமக்காக நம் நாட்டின் வலிமையை உயர்த்த)

*தமிழரல்லாத அதிகாரிகளில் பெரும்பாலோர், மெத்தக் கற்ற மேதைகள்; தலைவர்கள்;, அறிவியல் அறிஞர்கள்;> பேராசிரியர்கள் திரைத்துறை, விளையாட்டுத் துறையைச் சார்ந்த பிரபலங்கள்; சாதிப் பெயர்களோடு ஒட்டிக்கொண்டிருப்பவர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாத உண்மை. கல்வியறிவுள்ள தமிழர்களில் 98% பேர் சாதிப் பெயர்களை தங்கள் பெயர்களோடு ஒட்டிக் கொள்வதைக் கேவலமான செயலாக எண்ணுகிறார்கள். கல்வியறிவுள்ள 0.005% தமிழர்கள் வீம்புக்காக பிற மாநிலத்தவரைப் பார்த்து சூடு போட்டுக் கொள்கிறார்கள். அவர்களும் மாறுவார்கள் என்று நம்புவோம்)

எழுதியவர் : மலர் (8-Nov-14, 12:16 pm)
பார்வை : 171

மேலே