பொன்நகை மிஞ்சும் புன்னகை

சிரித்து மகிழும் செல்வம்..!

கணமது அறியாத பிள்ளையவன்;
காரணம் தெரியாத கிள்ளையவன்;
அடித்தால் அழத்தான் தெரியும்;
அழுதால் அடித்தப்பின் மகிழும்..!

அவனுக் கவனே யாண்டவனாய்,
அடுத்த கணமே மறந்தவனாய்;
அன்னைதந்தை அகில மென்று-
அழகிய சிரிப்பில் காட்டிடுவான்..!

ஆயுள்காக்கும் அழகிய மருந்தின்,
அமுதசுரபி அவனிட மென்றால்-
பூட்டிவைக்கும் பொன்னகை கூட
போட்டிபோடும் புன்னகைக் காண..!

தரையில் நிழலை தட்டியபடியே,
தவழுமழகில் தாவி வருவான்;
மலரும் நிலவை கையில்பிடித்து-
மனதைநிரப்பும் மன்னன் அவனே..!

உள்ளதெல்லாம் எனக்கே யென்று,
உள்ளேவெளியே ஆட்டம் போட்டு;
ஏழுதலமுறை சேர்த்து வைப்பான் -
எதையுமாள பிள்ளை யின்றி..!

பயமேயறியா பச்சிளம் குழந்தை,
பார்த்தமட்டில் பகையும் மாறும்;
பிள்ளையில்லா குறையில் வாழ-
பிணியும்நோயும் பின்னே போகும்..!

ஈகைதந்து இல்லறம் காத்தால்,
இன்பம்தரவே ஈசன் பிறப்பான்;
அன்புயென்னு மழலை செல்வம்
ஆசைமுகத்தில் அதிகம் சேர்ப்பான்..!

எழுதியவர் : ஜாக் .ஜி .ஜே (31-Jan-15, 4:26 pm)
பார்வை : 116

மேலே