இறைவன் இளிச்சவாயன்-Mano Red

அன்று மட்டும் என்ன
அவ்வளவு கூட்டம்,,,??
அத்தனை நாளும் பார்த்த
அதே இறைவன் தான்,
அன்று கொஞ்சம் நன்றாக
குளிப்பாட்ட பட்டிருப்பார்…!!

கோவில் வரும் வழி நெடுக
பேச்சுக்கு கூட துளி இரக்கமின்றி
அத்தனை மனிதாபிமானங்களையும்
அடித்து நொறுக்கிவிட்டு,
சிறப்பு தரிசனம் பெற்றால்
நீ யோக்கிய மனிதனா..??

எல்லாவற்றிற்கும் தலையாட்ட
இறைவன் என்ன முட்டாளா…??
இல்லை இளிச்சவாயனா…??
வரிசையில் நிற்கும் போது
பெண்களை உரசிவிட்டு
கண்ணை மூடி மன்னிப்பு கேட்டால்
நீ புனிதமானவனா..??

ஆன்மீக விஞ்ஞானம் எல்லாம்
அடியோடு மறைந்து போனது,
ஏன் என்று தெரியாமலே
மூடம் கண்ணை மறைக்கிறது,
முட்டிக்கொண்டு முந்தி
எட்டிப் பார்த்தால் இறைவன் தெரிவானா..??

பய பக்தி இருக்கலாம்,
பயத்தினால் பக்தி இருக்ககூடாது,
தற்போது கோவிலும்
குப்பைத்தொட்டி போலத்தான்,
பாவக்குப்பை மட்டும் கொட்டவே
பாவப்பட்ட கூட்டம் வருகிறது…!!

இறைவன் ஒன்றும்
ஆகப் பெரியவன் அல்ல,
உலக உருண்டையை கையில் சுற்றி
மாய வித்தைகள் செய்பவனுமல்ல,
தவிக்கும் நேரத்தில்
தண்ணீர் தருபவனும் இறைவன் தான்..!!

எழுதியவர் : மனோ ரெட் (18-Feb-15, 10:52 am)
பார்வை : 120

மேலே