தமிழரென்று இனி உலகு பழிக்கும்.. !!!!

யார்தான்
வருவீர்கள்... மீட்டெடுக்க... ?
யாரோபோல்
விலகுகிறீரே.... தமிழராநீர்..?

அன்று..
எதிரிகளின் கூட்டம்
தாய்மண்ணை மிதித்ததற்காய்...
தலையெடுத்தான் நெடுஞ்செழியன..
இன்றோ
தாய்மடியையே மிதித்திட்டும்
தலையெடுத்தும் காண்பாரில்லை..


அன்று
கண்ணகிக்கு சிலையெடுக்க
கங்கைவரை சிறைபிடித்தான் ..
சேரன் செங்குட்டுவன்
இன்றோ
கண்ணகிகள் கற்பழிக்கப்பட்டும்
கண்மூடி மெளனம் ஏன்..
சோரம் போனதா...
சேரனின் தமிழினம்.. ?


சிங்களவர்
பல்லாங்குழியில் விளையாட
குண்டுமணிகள்
பற்றாதபோது
குள்ளமணிகளின்
கண்மணிகள்
தாரளமாகவே கிடைக்கிறதாம்....


அங்கே
நம்மவர்
அலங்கோலமாய் சாகிறார்...

இங்கே
நீங்களோ
அலங்காரமாய் திரிகிறீர்...


அங்கோ
கற்பென்பது
கடைச்சரக்கானது...

இங்கோ..
கற்பனையான
குற்றச்சாட்டென்கிறீர்...


அங்கோ
அடிமைகளாய் ...
ஆண்ட இனம்

இங்கோ
அடிமைகளாகவே
ஆன இனம்...


அங்கோ
சிறுவர்களைக்கூட
சிதைக்கும் அவலம்

இங்கோ
மறவர்கள் நாங்களென்று
வாய்ச்சொல்லின் வீரம்...

அங்கோ
பசிக்குச்சோறின்றி
பாலையாய் வயிறெரியும்...

இங்கோ
பசப்பாய் பகல்வரைக்கும்
பட்டினிப்போர் தொடரும்....


தேசங்களையெல்லாம்
ஆண்ட தமிழன்..
இன்று
நேசங்களற்று
நிழல்மனிதர்களாய்...
நிஜ சவங்களாய்...

தயவுசெய்து
தமிழரென்று
யாரும் சொல்லிக்கொள்ளாதீர்கள்
இதயம் துடிக்கிறபொழுது
கண்கள் நடித்துக்கொண்டிருப்பதா...?
ஈழம் எரிகிறபொழுது
தமிழன் சிரித்துக்கொண்டிருப்பதா...?


மெல்ல தமிழினம் சாகுமா.....
கல்லறை கருவறை ஆகுமா...

வீரம் வடிந்த ஈழத்தில்
இனி
ஈரம்தான் வடியுமா...?

தமிழன்னையின்
கண்ணீர்துளிதான்..
ஈழம்

ஆனந்தத்திலா..
அவலத்திலா....
வரலாறூ கேட்கும்
பதில்சொல்
தமிழா....!!!!!!!


எழுதியவர் : muruganandan (23-Apr-11, 3:27 pm)
சேர்த்தது : MURUGANANDAN
பார்வை : 400

மேலே