சத்திய மனமேநித்தியம் வாழ்வே

சத்திய மனமே!நித்தியம் வாழ்வே!

அத்தை மகனே! அம்மான் மகளே!
முத்தைத் தமிழே!மூத்த புகழே!
இத்தரை மணமே!ஒத்திரு மலரே!
சத்திய மனமே!நித்தியம் வாழ்வே!

புட்ப ராஜனும் பூவழகி ராணியும்
இட்டமாகியும் ஈன்றோரைப் பேணியும்
இரத்தங்கள் உறவாக சித்தங்கள் நிறைவாக
அருத்தங்கள் திருவாக உத்தமம் வாழ்கவே!

ஒருவரை ஒருவர் உணர்ந்து புரிந்து
ஒருவரில் மறுவர் ஆதிக்கம் துறந்து.
அன்பும் பாசமும் சமமெனப் பகிர்ந்து
அமைதி நிறைந்து வாழ்க மகிழ்ந்து.!

இன்பம் துன்பம் இரண்டிலும் இணைந்து
எல்லாம் ஒன்றில் ஒருசுதி அமைந்து
நம்பிக்கை தன்னில் நாளும் வாழ்ந்து
நன்னிலை நின்று வாழ்க சிறந்து.!

அச்சம் அற்ற நம்பிக்கை கொண்டு
உச்சம் காண உம்மில் துணிந்து.
துச்சம் என்றே தூரம் மறந்து.
எச்சம் வாழ வாழ்க முயன்று.

தம்மைத் தாழ்த்தும் தாழ்மை அகற்றி!.
உம்மை ஏற்றும் உள்ளறி வேற்றி!
இம்மை பயத்தின் பேதமை விடுத்து
செம்மை முயன்று வாழ்க முடித்து!.

திண்ணியர் ஆண்ட பூமி இதனை.
புண்ணியர் வாழ்ந்த மண்ணும் இதனை.
கண்ணியம் நேராய் காக்கும் வாழ்வினை
நண்ணிய அறவழி ஆற்றியும் வாழ்க!

மண்ணுயர் மாந்தர் முன்னவர் மாட்சியாய்
எண்ணுயர் நேர்ந்து விண்ணவர் சாட்சியாய்
நன்கலம் தங்க நன்மக்கட் பேறாய்
மங்கலம் பொங்க வாழ்க வாழ்கவே!

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (5-Apr-15, 8:06 am)
சேர்த்தது : கொ.பெ.பி.அய்யா.
பார்வை : 9176

மேலே