தைநாளே தமிழாண்டு
சித்திரையன்று தை நாளே
பாவலர் கருமலைத்தமிழாழன்
சித்திரையா தமிழாண்டின் பிறப்பு ! கேட்டால்
சிரிப்புவரும் ஆண்டுபெயர் சொல்லும் போதே
இத்தரையில் ஆண்டிற்குப் பெயரைச் சூட்டி
இயம்புகின்ற வழக்கமெந்த நாட்டி லுண்டு !
முத்தமிழில் பலசொற்கள் குவிந்தி ருக்க
முன்னோர்கள் வடமொழியா தேர்ந்தி ருப்பர்
நத்திவாழ வந்தவொரு நரிகூட் டத்தின்
நயவஞ்ச சூழ்ச்சியாலே இந்தத் தாழ்வு !
பசுத்தோலைப் போர்த்திவந்த புலிக ளிங்கே
பகுத்தறிவைக் கதைகளாலே மழுங்கச் செய்து
கொசுவைப்போல் தமிழ்குருதி உறிஞ்சி நோயாய்
கொடுத்திட்ட ஆரியத்தால் மொழிகெ டுத்து
நசுக்குகின்ற முதலாளி வர்க்கம் போன்று
நற்றமிழர் பண்பாட்டை நலிய வைத்துச்
சிசுக்கொலையைப் போல்தமிழின் உயிர்ப றித்துச்
சீரழித்த தாலிந்த அவல மிங்கே !
இன்னுமவர் சொல்கேட்டு இருப்ப தோநாம்
இனியதமிழ் அறிஞரெல்லாம் ஆய்ந்து ரைத்த
பொன்னான தைநாள்தான் தமிழின் ஆண்டு
பொய்யான சித்திரைதான் என்று சொல்லி
சென்னிதாழ்த்தும் எட்டையப்பர் சொல்ம றுத்தே
செத்தமொழி வால்பிடிக்கும் கூட்டத் தாரின்
புன்மையான இக்கருத்தை ஏற்றி டாமல்
புவிக்குரைப்போம் தமிழாண்டு தைதான் என்றே !
( 35 ஆண்டுகளாக வெளிவரும் இலக்கியத் திங்களிதழ் முகம் ஏப்ரல் 2015 இதழில் வெளிவந்த கவிதை )