மனதை லேசாக்குங்கள் முகப்பரு எட்டிப்பார்க்காது

அழகான கன்னத்தில், நெற்றியில் முத்து முத்தாய் பரு தோன்றினால் தன்னை அறியாமல் கை கிள்ளிப்பார்க்கும். இதனால் பருக்கள் அதிகமாகி ஆங்காங்கே வடுக்களாய் மாறும். முகப்பரு தோன்றுவதற்கு மன அழுத்தமும் ஒரு காரணம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். கோடைகாலத்தில் வியர்வையும், அழுக்கும் சேர்வதால் முகத்தில் கரும்புள்ளிகளும், முகப்பருவும் தோன்றும். முகத்தில் எண்ணெய் வடிந்தாலோ, ஆரோக்கிய குறைபாடினாலும் முகப்பரு வரும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். முகப்பரு வராமல் தடுக்க அவர்கள் கூறும் இயற்கையான வழிமுறைகளை பின்பற்றிப் பாருங்களேன்.

மனதை லேசாக்குங்கள்.

மன அழுத்தம் இருந்தால் அது முகத்தில் பருக்களாக வெளிப்படும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். எனவே எதைப்பற்றியும் கவலைப் படவேண்டாம். யோகா, தியானம் செய்து மனதை லேசாக்குங்கள் முகம் பளிச் என்று ஆகும்.

நல்ல உறக்கம்.

தினசரி எட்டுமணி நேரம் உறங்குவது சருமத்தை புதுப்பிக்க உதவும். இதனால் சருமம் ஆரோக்கியமாகும். எனவே நன்றாக ஓய்வெடுங்கள் முகப்பரு வராது.
தண்ணீர் குடியுங்கள்

சருமத்தில் அழுக்குகள் இருந்தால் அவை முகப்பரு ஏற்பட காரணமாகிறது. தினசரி 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் அருந்துவது உடலின் நீர் சத்தினை தக்க வைக்கிறது. தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. இதனால் சருமத்தில் அலர்ஜி, முகப்பரு எதுவும் ஏற்படாமல் தடுக்கிறது.
நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள். பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதால் பருக்கள், சருமநோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

ஜங் ஃபுட் வேண்டாமே.

வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்த்து விடுங்கள். அதேபோல் ஜங் ஃபுட் சாப்பிடாதீர்கள். சிப்ஸ், வறுத்த சிக்கன் போன்றவை எண்ணெய் பசையை அதிகமாக்கும் பருக்களை ஏற்படுத்தும் இவற்றை தவிர்த்தாலே முகப்பரு ஏற்படாது.

எலுமிச்சை சாறு.

முகப்பரு தோன்றியுள்ள இடத்தில் சிறிதளவு எலுமிச்சை சாறு பூசுங்கள். இது முகப்பருவை மறையச் செய்யும். இரவு நேரத்தில் உறங்கும் முன் சிறிதளவு டூத்பேஸ்ட்டை பூசுங்கள் அது உலர்ந்து முகப்பருவை உதிர வைக்கும்.
வெள்ளைப் பூண்டு, புதினா
வெள்ளைப்பூண்டு எடுத்து தோலினை உரித்து முகப்பரு உள்ள இடத்தில் தேய்க்கவும். வடு கூட மறைந்து போகும். அதே போல் புதினாவை அரைத்து சாறெடுத்து அதை முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் அரிப்பு குணமடையும்.
முட்டையின் வெள்ளைக்கரு எடுத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசலாம் முகப்பரு குணமாகும். தேன் சிறந்த மருந்தாக செயல்படுகிறது. முகப்பரு தோன்றிய இடத்தில் தினசரி இரண்டு முறை சிறிதளவு தேன் பூசி வர முகப்பரு வராது.
முத்து முத்தாய் முகப்பரு - பன்னீர் சந்தனக் கலவைப் போதும்
பருவ வயது ஆண், பெண்களின் மிகப் பெரிய பயம் பருக்கள். முகத்தில் பரு தோன்றினாலே தேவையற்ற மன உளைச்சலும், பதற்றமும் இளயதலைமுறையினருக்கு ஏற்படுகின்றன. எண்ணைத் தன்மை உடைய சருமத்தை உடையவர்களில் 90 சதவீதம் பேருக்கு முகப்பரு வந்துவிடுகிறது. இதர சருமம் கொண்டவர்களில் 50 சதவீதம் பேருக்கு முகப்பரு பாதிப்பு ஏற்படுகிறது. பருக்களின் பல வடிவங்களில், கரும்புள்ளி, வெண்புள்ளிகள் ஆகும்.

பருவமாற்றத்தினால் ஏற்படும் ஹார்மோன் சுரப்பு, எண்ணெய் பசை அதிகரிப்பு, இவற்றை விட பாக்டீரியா தொற்று போன்றவையே பருக்கள் ஏற்பட காரணமாகின்றன. இதனால் சருமத்தில் சிறு கட்டிகளும், வீக்கங்களும் ஏற்படுகின்றன. முகம், கழுத்து, மார்பு, முதுகு இவற்றில், சீழ் போன்ற திரவம் நிறைந்த பருக்களாக கரும்புள்ளி, வெண்புள்ளிகளாக தோன்றுகின்றன.

எலுமிச்சைச் சாறு.

எலுமிச்சைச் சாறு, ரோஜா பன்னீர் சம அளவு எடுத்து அதனை கலந்து முகத்தில் பூசி அரைமணிநேரம் ஊறவைத்து பின்னர் வெது வெதுப்பான நீரில் கழுவவும். வாரம் மூன்று நாட்களுக்கு இதனை அப்ளை செய்தால் முகப்பரு மறைந்துவிடும். எந்த காரணம் கொண்டும் எலுமிச்சைச் சாற்றினை தனியாக முகத்தில் தேய்க்கக் கூடாது.

சந்தனம் பன்னீர்.

சந்தன பவுடர், பன்னீரில் குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். மூன்று மாதங்கள் இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் பருத் தொல்லையே இருக்காது. சந்தனக் கட்டையை பன்னீர் விட்டு அரைத்து முகத்தில் தடவினால், பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.
பன்னீர் ரோஜா மொட்டுக்களை எடுத்து, அது நனையும் அளவு சூடான தண்ணீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அந்த நீரை வடிகட்டி முகத்தில் பூசி அரைமணி நேரம் ஊறிய பின் துடைத்து எடுக்கவும்.

கொழுந்து வேப்பிலை.

வேப்பிலை சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. கொழுந்து வேப்பிலையையும் மஞ்சளையும் தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவிவிட வேண்டும். சோற்றுக் கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மையுடையது. அவற்றின் நடுவில் இருக்கும் பசையை எடுத்து, அதில் சம அளவு நீரைக் கலந்து முகத்தில் தடவிவர பருவுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு ஸ்பூன் அருகம்புல் பொடியும், குப்பமேனி இலைப் பொடியும் குளிர்ந்த நீரில் கலந்து பருக்களில் போடலாம். இது சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. இது பருவை குணமாக்கும்.

வெள்ளைப்பூண்டு.

வெள்ளைப் பூண்டினை எடுத்து அதன் தோலை உரித்தபின்னர் முகப்பரு உள்ள இடத்தில் வைத்து தேய்க்கவும். தினசரி பத்து நிமிடம் தேய்க்க முகப்பரு மறையும்.

ஆப்பிள் பப்பாளி.

பப்பாளிச் சாற்றினை முகத்தில் பூசி வர பருவுக்கு இயற்கையான சிகிச்சை கிடைக்கும். ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து அதில் ஒரு டீஸ் பூன் தேன் கலந்து முகத்தில் பூசி வர பரு மறையும். வாரம் இருமுறை முகத்தில் அப்ளை செய்யவேண்டும்.

உணவுக்கட்டுப்பாடு.

பெண்களின் அழகான கன்னங்களுக்கு அவ்வப்போது அச்சுறுத்தலாகத் தோன்றுவது முகப்பருக்கள். பருக்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால் மலச்சிக்கல் வராத அளவுக்கு வயிற்றைப் பராமரிக்க வேண்டும். பொடுகுத் தொல்லை, ஹார்மோன் பிரச்னை, நகத்தினை வளர்த்தல், முறையற்ற உணவுப் பழக்கம், உணவில் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்துதல் போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும். பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.
தலையணை உறை, சோப், டவல் போன்றவைகளை தனித்தனியாக ஒவ்வொருவரும் வைத்து தங்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகப்பரு இருக்கும் ஒருவர் பயன்படுத்தும் இத்தகைய பொருட்களை இன்னொருவர் பயன்படுத்தும் போது அவருக்கும் இது பரவக்கூடும். குளிப்பதற்கும் சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் நிறைய பருக வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். இப்படியெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு வரலாம்.

உடற்பயிற்சி அவசியம்.

தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது வெளியேறும் வியர்வையினால், துவாரங்களில் உள்ள அழுக்கு நீக்கி பருக்கள் வராமல் தடுக்கலாம். அதுபோல முகத்தில் பருக்கள் பெருமளவு உருவாகி விட்டால் அதற்கு வெளியே கொடுக்கும் சிகிச்சை மட்டுமின்றி உள்ளேயும் சிகிச்சை அவசியமாகும்.

எழுதியவர் : (17-Apr-15, 9:58 pm)
பார்வை : 366

சிறந்த கட்டுரைகள்

மேலே