எப்படி அதை கேட்பது
இந்த சாலை எங்கே செல்கிறது
என்று கேட்பதிலும்
நான் இங்கு போக வேண்டும்..
இந்த சாலையில் செல்லலாமா
என்று கேட்பதிலும்..
நான் இந்த இடத்திற்கு போக
எப்படி செல்ல வேண்டும்
என்று கேட்பதிலும்
வித்தியாசங்கள் இருப்பதால்தான்..
விடைகள் வேறுபடுகின்றன..
போக வேண்டிய இடமும்
இந்த சாலையும்..
பிரதானமாக இருந்திட..
உண்மைக்கு அருகில்
செல்ல முடிவதில்லை..
தெரியாததை தெரியாது என்று
சொல்லுவதற்கும் தெரியாது
என்றால்..
தெரிந்ததைக் கூட சில பேர்
தெரியாது என்று
சொல்லி விட்டு போய்விடுகிறான்!
இது வழி கேட்பதில் துவங்கி..
உறவுகளுடன்..
ஏன் கடவுளிடம் செய்யும் பிரார்த்தனை வரை
இப்படித்தான் நடக்கிறது!
இன்னும்
எதைக் கேட்பது..
அதை..
எப்படிக் கேட்பது
என்றே புரியவில்லை உனக்கு
என்று ..
வாழ்க்கை என்னைப் பார்த்து
புன்னகைக்கிறது..!