வேண்டாமெனத் தோன்றும் கணத்தில்
அருவியின் குரல்
துவண்டு மிதந்த போது...
என் கனத்த மௌனத்தின்
பரிசளிப்பாய் அலையும்
ஈர முத்தங்களின் ஒற்றைச் சிறகு.
கூடு திரும்ப மனமின்றி...
அலை அலையாய் காற்றுடன்
புனைவு பேசிச் செல்லும்
சில பறவைகள்...
சில மழைக் காதல்களை.
பெரு வெளியில் சிக்கிய இலையென...
உறக்கமற்ற இரவுகளில்
கற்பனை நழுவிச் செல்கிறது
நீ தூவிச் சென்ற
பனித்துளியைத் தழுவியபடி.
கிளர்ந்தெழுந்து
நிசப்தமாகும் நினைவுகளில்...
பூ மலரும் ஓசை
இடைவெளியாகிறது.
எதுவும் வேண்டாமெனத் தோன்றும்
இக்கணத்தில் எனக்கு...
இந்தக் கணத்தின்
அமைதி மட்டும் போதும்.