கோல்கொண்டா

கோகினூர் வைரம் தந்த பகுதியில்..
ஒரு மப்பும் மந்தாரமுமான
காலைப் பொழுதில்
கோல்கொண்டா கோட்டையின் ..
உள்புகுந்த வேளை..
ராணிகளின் சமாதிகளும்..
தர்காக்களும்..
ஒட்டக லாயங்களும்..
சொன்ன மௌன மொழிக் கதைகள் பார்த்து ..
அரசியல் சதுரங்கக் குதிரைகளின்
ஆர்ப்பாட்டக் குளம்பொலிகள்
சன்னமாக கேட்டபடி..
மேலே ஏறுகையில் ..
படப்பிடிப்புக் குழு ஒன்று ..
மும்முரமாய் இயங்கிக்கொண்டிருக்க..
உச்சிக்கு சென்று மசூதியொன்றின்
படிக்கட்டுகளில் நான்
அமர்ந்த போது..
பெண்கள் அங்கே யாருமில்லை..
ஆனால்..
ஈன சுரத்தில்..
"ஹுசூர்"
என்று என் காதுகளில் ஒலித்த
இளம் பெண்ணின் குரல் ஒன்று
எனக்கு கேட்டது..
சுற்றிலும் பெண்கள் யாருமில்லை ...
உங்களுக்கு கேட்டதா..?