பகல் சுருண்ட காலம்
கடல் தாண்டிய நிலங்களில்
பகலைச் சுருட்டி
சாய்த்திருக்கிறது காலம்.
கோடையைத் தின்கிறது
கனவுகள் அரிக்கப்பட்ட
நினைவின் துளைகள்.
சொல்லற்ற பறவைகள்
நீர் மிதக்கும் கண்களோடு
களைத்த சாலைகளில்
விதியின் நிழலோடு
கடந்து செல்கின்றன.
அலைகளில் நெளியும்
பிம்பமாகிவிட்ட உடல்
மிரட்சியூட்டும் இருளுக்குள்
நூலாம்படைகளில்
தனது வேலிகளைத் தயாரித்தன.
கதை மாந்தர்களாகிவிட்ட
தலைமுறையோ
விடுதலையின்
படிமச் சிதைவுகளாகிவிட...
ஒரு இனத்தின்
கண்ணீர் மழை
வணங்கி
வெதும்பிச் செல்கிறது...
எம் நிலத்தில் முளைத்த
நடுகற்களை வணங்கியபடி.