சமூகச்சலவை

விருந்தொன்றில்
உயர் ரக ஆடையில்
மதுப்புட்டில்
சரிந்து ஊற்றியபோதும்!!

பூசாரியின்
கை நடுக்கத்தில்
சிதறிய சந்தனம்
ஆடையெங்கும்
புள்ளிகள் செய்தபோதும்!

சட்டைப்பையின்
அடிவாரத்தில்
பேனா மை
ஒழுகிக்கிடந்த போதும்!

வேலையாள்
வராத நாளொன்றில்
எனது ஆடைகளை
நானே
சலவை இயந்திரத்தில்
இட்டபோதும்!

வராத நினைவு!

சலவை இயந்திரம்
கழிவு நீரை
வெளியேற்றும்
தருணத்தில்தான்!

ஆற்றங்கரையில்
தூக்கிட்டு இறந்துபோன‌
சலவைத்தொழிலாளி
தன் மகனுக்கு
எழுதிவைத்த‌
இரத்த கோர்வைகளை
நினைவுபடுத்துகிறது...

ராசா
எசந்திரம் பூரா
என் தேசத்த
தின்னுருச்சு

எனெக்கென்னு
இருந்த தொழிலு
எடுபட்ட காத்தோட‌
எங்கனையோ போயிடிச்சு

நீயாச்சும் படி ராசா

முடிஞ்சா ஓ
உடுப்ப நீயே
முதுக வளைச்சு
தோச்சுக்கப்பா..

ஊத்த தேக்க‌
ஒரு இனத்த‌
ஏப்பாடு செய்தவன‌
தெரியலையே

அத்தொழில‌
பாதியில
அறுத்தவனும்
கண்ணுக்கு
அகப்படலையே

ஐயோ சாமி
எம் பொழைப்பில‌
மழையொன்னு
விடாம நீ காத்த

கடசியில‌
ஏம் பொழைப்பு
ஆயிடிச்சே
ஏ வீட்டு அடுப்பாட்டம்

நீயாச்சும் படி ராசா

எழுதியவர் : புலவூரான் ரிஷி (22-Oct-15, 1:06 am)
பார்வை : 107

மேலே