தவம் செய்வது வரம் நாடியே

தவம் செய்வது வரம் நாடியே!
இதழில் இனிப்பவளே!
இமையில் பனிப்பவளே!
என்றும் புதியவளே
இதயத் தீந்தமிழே!

உந்தன்
விழிக்கோலங்களில் விழுந்துவிட
வெம்மைக் காற்றில் கலந்துவிட- உன்
வாசல் கோடியில் வட்டமிடும் சின்ன
வயதோனைக் கொஞ்சம் பார்த்தால் என்ன?

எந்தன்
சந்தனத் தோட்டமே
நந்தவனப் பூங்காற்றே
கனவுகளின் கோட்டமே
கவிதைகளின் தேனூற்றே!

வசந்தமே
உன்னை மூச்சில் சேர்த்து
ஆத்மாவுக்குள் அனுப்பும் போது
அந்தரங்கத்துள் அரங்கம்
அமைக்கிறாய்..

வைர முத்துவோடும்
வலம் புரியாரோடும்
வாசமுடன் வாசம் செய்யும் நீ
என்னை மட்டும் ஏனோ
மோசம் செய்கிறாய்?
உந்தன்
ஆவலனைக்
காவலனாய்க் காதலனாய்
எண்ண வேண்டாம்…
உந்தன்
ஏவலனாய் ஏற்றாலே போதும்,
ஏப்பமிடும் ஏழையின் வயிறாய் இந்த
எளிய மனம் எக்காளமிடும்…

இவன்
தவம் செய்வது உன்
வரம் நாடியே – உன்
தலை அசைந்தால்
தனம் கோடியே
சுகம் தேடியே
சுமை தாங்கிடும் இவன்
உயிர் உன்
சுவைக்காகவே
தினம் ஏங்கிடும்

எழுதியவர் : வ.முத்துமணி (30-Oct-15, 4:31 pm)
பார்வை : 100

மேலே