சகிப்புத்தன்மை பொறுமை கவிஞர் இரா இரவி

சகிப்புத்தன்மை ! ( பொறுமை ) கவிஞர் இரா .இரவி !

சகிப்புத்தன்மை என்பதையே மறந்து வருகின்றனர்
சகிப்புத்தன்மையை எல்லோரும் இழந்து வருகின்றனர் !

பொறுமை என்றால் என்னவென்று தெரியவில்லை
பொறாமை என்பதை பலரும் கொள்கின்றனர் !

மனிதனை மனிதன் நேசிக்கும் நல்ல
மனிதாபிமானத்தை அறியவில்லை !

விலங்கிலிருந்து வந்த மனிதன் விலங்கு ஆவதேன்
விலங்குகள் கூட கூடி அன்பாக வாழ்கின்றன !

ஒரு கன்னம் அடித்தால் மறுகன்னம் காட்டாவிடினும்
உடனே திருப்பி அடிக்காமல் இருக்கலாமே !

என் சாதி பெரிது உன்சாதி சிறிது என்ற
இழிவான சண்டைகளுக்கு முடிவு கட்டுங்கள் !

என் மதம் உயர்வு உன் மதம் தாழ்வு என்ற
இனிமையற்ற மோதலுக்கு முடிவு கட்டுங்கள் !

எங்கு வளர்ந்தாலும் மணம் மாறாக் கருவேப்பிலை
எங்கு வாழ்ந்தபோதும் மனிதனாக வாழுங்கள் !

பெரும்பான்மையை என்பதால் அகந்தை வேண்டாம்
சிறுபான்மை என்பதால் அஞ்சவும் வேண்டாம் !

மிதித்தவருக்கும் காலணி தந்தார் காந்தியடிகள்
உமிழ்ந்தவரையும் மன்னித்தார் அன்னை தெரசா !

தீயவரை வெறுக்காமல் அன்பு செய்தார் புத்தர்
தவறுகளைத் திருத்திட வாய்ப்பு வழங்குவோம் !

பழிக்குப்பழி வாங்குவது மிருககுணம்
பண்போடு மன்னிப்பதே மனிதகுணம் !

.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (20-Nov-15, 8:55 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 721

மேலே