மழை நின்ற பின்-கார்த்திகா

சில ஏரிகள்
கண்டறியப்பட்டன

வெட்டி வீழ்த்தி
சமன் செய்து
கூரைகளாகிய குளங்கள்
மீண்டும் குளமாகும்

பரீட்சைக்கு படிக்கணும்
பால் கார்டு எரிவாயு இணைப்பு
குழாய் சீரமைப்பு புதிதாய் வீடும்
சில உறவுகளும் கூட வேண்டும்

அப்பா அம்மா
சொந்தங்கள் எல்லோரும்
தொலைத்த வாழ்வை
திரும்ப மீட்க வேண்டும்

புதிதாய் பெய்த பெருமழை
புதிதாய் அனைத்தையும்
வாங்க வைத்து விட்டதோ

அழுதழுது வழிந்த கண்ணீர்
மழை நீரில் கரைந்து கலங்கியதில்
யாருக்கு வலித்திருக்கும்?

இனிமேலும் அழுவதற்கு
வாய்ப்புகள் வேண்டாம்

மழை ஒதுக்கிய
உறவுகளின் உடற்குவியல்கள்
பாவ மன்னிப்பு வேண்டியதில்

சில மேகக்கூட்டங்கள்
மீண்டும் கருமை அணிந்தன
தெற்கு நோக்கியபடி..

எழுதியவர் : கார்த்திகா AK (10-Dec-15, 3:58 pm)
பார்வை : 492

மேலே