இப்படியும் சிலர்
என் நண்பன் ஒருவன் என்னோடு பகிர்ந்து கொண்ட மழைநாள் நிகழ்வு- ஒரு கவிதை வடிவத்தில்.
அடைமழையின் காரணத்தால் அடையாறின். இரு கரையும்
உடைந்துள்ளே வெள்ளம் புகுந்திட்ட காரணத்தால்
தாழ்வான பகுதிகளில் வாழுகின்ற மக்களெல்லாம்
ஆழி வந்து சூழுமுன்னே வீடு விட்டு ஓடு என
சன்செய்தி , பீபீசீ , சீஎன்என் , வாட்ஸ் ஆப் என
இன்னபிற இணையங்களில் பறையறைந்த தை அறிந்து
பெங்களூரில், பம்பாயில் , சிங்கப்பூர் , நியூயார்க்கில்
எங்கெங்கோ வசிக்கின்ற நண்பர்களும் உறவுகளும்
எங்களால் செய்வதென்ன இப்போது என வருந்தி,
தங்குகின்ற இடம் விட்டுப் பெயர்ந்துவிடு எனப்பதைத்தார்!
எட்டுத் தெரு தள்ளி நீர் எட்டாத உயரத்தில்
எட்டு மாடிக் கட்டடத்தில் வசிக்கின்ற உறவுகளோ
தொட்டால் சுடும் என்று தீயைத் தவிர்ப்பது போல்
எட்டி நின்றார்; எங்களுடன் எந்த ஒரு தொடர்புமின்றி.
வெள்ளமெல்லாம் நன்றாக வடிந்தபின்னே எனை அழைத்து
"உள்ளமிகத் துயருற்றோம்; உம்துன்ப நிலைபற்றி
இப்போதேதான் அறிந்தோம்! உம்குடும்பத்தினர் எல்லாம்
அப்போதே என்னில்லம் வருவதற்கேன் வெட்கமுற்றீர் ?
நான் வேறு, நீ வேறோ? ஏனிந்தத் தயக்கமென்று
தேனொழுகக் கேட்டாரே! என்ன பதில் நான் கூற ?