நிலவும் நாணியதே கற்பனை பா தந்த கஜல்

வெண்ணிலா எட்டிப் பார்த்தது
முகில்திரை விலக்கி
வெண்மலர் ஒன்று எட்டிப் பார்த்தது
கொடி இலை விலக்கி
முகத் திரையை விலக்கி நீ பார்த்த போது
மலரும் நிலாவும் இலை முகில் திரையில் மறைந்ததே
வெட்கத்தில் !
கஜலாக.....
முகத்திரையை விலக்கி என் நிலாவே நீ பார்த்த போதே
முகில் திரையில் வெட்கத்தில் வான்நிலாவும் மறைந்ததே
தன்னை மறந்து நீ வாய் திறந்து சிரித்த போதினிலே
முல்லை மலரும் நாணி இலையினில் மறைந்ததே
கண்களில் கவிதை எழுதும் பாரசீக ரோஜா நீ
என் நெஞ்சின் கவிதைகள் எல்லாம் நீ எழுதியதே
உன் புன்னகை வரி எழுதும் சிவந்த மௌன இதழ்கள்
என்னில் எழுதியது ஒரு வரி அதன் பெயர் காதல் என்பதே
உன் முக எழினில் நிலவும் நாணி வானில் மறைந்தது
உன் உதடுகள் சொன்ன உண்மையில் என்னுள்ளம் மலர்ந்ததே
----கவின் சாரலன்