அமைதி என்ற வைரமயமாய்

அமைதி என்ற வைரமயமாய் !
முக்கால் சதவீத நீராய்
இந்த பூமி !
முக்கால் சதவீதம் நீராய்
இருப்பதும் நாம் !

விளைந்திடுமே பூமியில்
பூக்களும்….புற்களுமே !
விளைந்திடுமே மனதில்
நல் எண்ணங்களும்….
தீய எண்ணங்களுமே !

தோண்டினால் பூமியில்
தங்கப்பாளங்களும்…
வைரங்களுமாய் !
தோண்டினால் நம்மை
தங்கம் என்ற அன்புமயமாய்
அமைதி என்ற வைரமயமாய் !

வானத்தை நோக்குமே பூமி
மழைத்துளிகளுக்காய் !
வானத்தை நோக்குவோம்
சிந்தனைத் துளிகளுக்காய் !

ஐம்பூதக் கலவையே பூமி
ஐம்பூதக் கலவையே நாம் !
பிரபஞ்சத்தில் சிறுபுள்ளி பூமி
பூமியே சிறுபுள்ளி என்றால் ..
அதனினும் சிறுபுள்ளி நாம்!

பிரபஞ்சத்தின் ஆட்சியில்
ஆடுகிறதே இந்த பூமி !
பூமியின் ஆட்சியில்
ஆடுகிறோமே நாம் !

இதற்கா இத்தனை ஆர்ப்பாட்டம்!
இதனை உணர்ந்தால் பூந்தோட்டம்!
புதிரா ? புயலா வாழ்ந்து பார்!
புதுயுக சரித்திரம் வரைந்து பார் !

---- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (6-Feb-16, 9:02 pm)
பார்வை : 112

மேலே