எண்ணம்

கொஞ்சம் ஞாபகம்
நிறைய மறதி
எப்போது வந்தது?
எனக்குத் தெரியவில்லை.
முப்போதும் என்னிலிருந்து
விலகியே நிற்கிறது
முடிவிலாத் தொலைவில்
ஒற்றைப் புள்ளியாய்..

முடிந்து போனதாய்ப்
போக்குக் காட்டும்
கணங்களில்
மனச்சுவரில்
மறுபடியும்
பட்டுத் தெறிக்கிறது
காற்றுள்ள பந்தாய்..

இப்போதாவது
வெளிக்கொணர வேண்டும்
என நினைக்கும் போது
எட்டி நின்று முறைத்து
மன அறையின் மூலைகளில்
மறுபடியும்
முடங்கிக் கிடக்கிறது

சொற்களின்
கும்மாளத்தையும்
எழுத்துக்களின்
ஆடம்பரத்தையும்
வேண்டாது
வெற்றுத்தாளில்
வலம்வர மறுத்து
ஒற்றையாக
என் உணர்வுக்குவியலோடு
ஒளிந்து கிடக்கிறது
ஓர் எண்ணம்

எழுதியவர் : சிவநாதன் (12-Feb-16, 9:43 pm)
Tanglish : ennm
பார்வை : 96

மேலே