ஒப்பிலா தெய்வம் நீயே

ஈடிலா பிறவி தந்த
***இனியவள் நீயே அம்மா !
கோடியில் ஒருத்தி நீயே
***கோபுரக் கலசம் நீயே !
ஓடியே சேவை செய்யும்
***ஒப்பிலா தெய்வம் நீயே !
தேடினும் உன்னைப் போல
***தேவதை எவரும் காணேன் !

கண்களில் கருணை பொங்க
***கடமையைக் கருத்தாய் செய்வாய் !
எண்ணிட முடியா வண்ணம்
***என்றுமே அன்பால் வெல்வாய் !
பெண்ணெனப் பிறந்தால் உன்போல்
***பேணிடும் பண்பு வேண்டும் !
மண்ணிலே இவர்போ லுண்டோ
***மற்றவர் போற்ற வேண்டும் !

நற்குணம் கொண்ட தாயே
***நானுனைக் கவியால் வாழ்த்தி
வற்றிடா அன்பை நாளும்
***வாரியே வழங்க வேண்டும் !
கற்சிலை தன்னில் இல்லை
***கடவுளை உன்னில் கண்டேன் !
பெற்றவள் எனக்கு நீயே
***பிறவிகள் தோறும் வேண்டும் !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (9-May-16, 1:07 am)
பார்வை : 315

மேலே