கனவே கலையாதே

தூக்கத்தில் இன்று வந்த
தூய்மையான கனவே நீ
ஆக்கத்தில் கூட இரு
கையசைத்துச் செல்லாதே
துக்கத்தை மறக்க வைத்த
மகிழ்ச்சியான கனவே நீ
பக்கத்தில் வந்து விடு
காததூரம் போகாதே
திக்கற்று நின்றவன் நான்
திடுமெனவே வந்தவள் நீ
சொக்கவைத்தாய் ஒரு கனவில்
இதயம்விட்டுக் கலையாதே
நேற்று வரை அறிந்ததில்லை
இன்று முதல் மறக்கவில்லை
நாளை விடிய துணைவருவாய்
தேவதையாய் பறந்திடாதே
பேச வேண்டாம் ஒருசொல்லும்
பக்கம் மட்டும் இருந்திடு
என் மனதில் இலையைப்போட்டு
உன்சிரிப்பால் விருந்திடு
நீ இருக்கும்வரை துன்பமில்லை
கூட வாழ்வில் வந்திடு
நீ மறுப்பைமட்டும் சொல்லிடாதே
இருப்பாயெனச் சொல்லிடு
சாரலெனவே உன் நினைவு
தூறலென உன் கனவு
விழித்த பின்னும் தொடரவேண்டும்
உனதருகாமையெனும் நிகழ்வு
மேகம் நூறுமுகம் கொள்ளும்
தாகம் எனைமிகக் கொல்லும்
சோகம் தர நீயில்லை
சொந்தமெனவே இருந்துவிடு...