காந்தி கணக்கு- சிறுகதை

“டேய் கனேசு, டேபிள் மேல இருக்குற பிஸ்கட் பாட்டில்களை உள்ற எடுத்து வைடா” காந்தி கணக்கு கமலக்கண்ணன் வருகிறான் என்றார் ஓனர்; கண்ணாயிரம்.
“இன்னா அது, காந்தி கணக்கு கமலக்கண்ணன், அவர் பேரே அதானா ? ;அப்பாவித்தனமாய் கேட்டான்.
டேய் அவன் பேரு கமலக்கண்ணன். அவன் எந்த டீ- கடைக்கு போனாலும், கேட்காமலேயே பிஸ்கட்டுகள் எடுத்து சாப்பிட்டு விடுவான். டீ-யும் கேட்டு குடித்து விடுவான்.
காசு கேட்டா….”பிறகு தாரேனே” என்பான். அது அவ்வளவுதான். ஏமாத்திடுவான், காந்தி கணக்குத்தான். அதனாலே, அவன் பேரே காந்தி கணக்கு கமலக்கண்ணன்னு ஆயிடுச்சு” என்றார்.
புரியலேயே… காசு கொடுக்காததுக்கும், காந்திக்கும் இன்னா தொடர்பு
காசு தராத ஏமாத்துற பேர்வழிகிட்ட இருந்து காசு வராது. உயிரோடு இல்லாத காந்திகிட்ட வாங்கிக்கங்க அப்படின்னு ஒரு தத்துவமா சொல்லிட்டு போயிடுவாங்க. இப்படி ஏமாத்தறவங்க தரவேண்டிய மொத்த பணமும் காந்தி கணக்காயிடும்” என்றார்
ஓனர் ஐயா, எனக்கு ஒரு யோசனை தோணுது. “அடுத்த தபா காந்தி கணக்கு கமலக்கண்ணன் வந்தா நான் பாத்துக்கறேன், நீங்க வெளியில வேலை இருக்கிறதா போயிடுங்கோ” என்றான் கனேசு.
கனேசு, “வில்லங்கமா ஏதாச்சும் பண்ணிடாதே” என எச்சரித்தார்
ஓரு நாள், காந்தி கணக்கு கமலக்கண்ணன் கடைக்கு வருவதைப் பார்த்ததும், ஓனர் கண்ணாயிரம் கடையை விட்டு வெளியேறிவிட்டார்.
வழக்கம்போலவே, காந்தி கணக்கு கமலக்கண்ணன் பிஸ்கட் பாட்டிலில் கைவிடப் போக “அண்ணா, நானே எடுத்து தாரேன்” என்றான் கனேசு.
கனேசை வித்தியாசமாய் பார்த்தான் காந்தி கணக்கு கமலக்கண்ணன்.
“இன்னா பாக்குறீங்க அண்ணா, நீங்க நல்ல வேலைல இருக்கிறதா சொல்றாங்கா, நெறைய சம்பளமும் வருதாம். அப்புறமும், பிஸ்கட், டீ-க்கு காசு கொடுக்காம, பிறகு தாரேன் சொல்லிட்டு தராமாலேயே ஏமாத்து வேலை செய்யறீங்களே, நல்லவா இருக்கு. ஒங்க பேரே காந்தி கணக்கு கமலக்கண்ணன் எல்லாரும் கூப்பிடறாங்களே! அது என்னைக்காச்சும் ஒங்க காதில விழுந்துதா? … விடாமல்….
நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த தேசத்தலைவரை, இப்பயெல்லாமா அசீங்கப்படுத்துவீங்க? காசு ஆசை இல்லாத காந்திக்கு… “காந்தி கணக்கு-;னனு பேரை வேற வைக்கறீங்களே! நியாயமா? காந்தி… காந்தியாகவே இருக்கட்டும்ண்ணா காந்தி கணக்கு வேண்டாமே.
இப்படியாக, கனேசு வாயில் இருந்து சவுக்கடியாய் வார்த்தைகள் வந்து விழ…”ஏற்கனவே தரவேண்டிய பணத்தையும், இப்போது சாப்பிட்ட பிஸ்கட், டீ-க்கும் சேர்த்து காசை கனேசு கையில் தந்துவிட்டு கமலக்கண்ணனாக நடையைக் கட்டினான் .
-- கே. அசோகன்,

எழுதியவர் : கே. அசோகன் (1-Oct-16, 6:29 pm)
சேர்த்தது : கேஅசோகன்
பார்வை : 155

மேலே