தாகம் தணித்திடு

பறவைகளே
உங்கள் சிறகுகளைத்
தாருங்கள் !

மேகங்களே
மெத்தைகளாய்
மாறுங்கள் !

மலர்களே
மங்கள ராகம்
பாடுங்கள் !

தென்றலே நீ
என் தேகச் சோலையை
தீண்டிச் செல் !

சுதந்திரக் காற்றே
நீ என் சுவாசக்
காற்றாய் மாறு !

மனம் கொண்ட
தமிழ்த் தாயே
என் கவிச் சோலையில்
சற்று இளைப்பாறிக்கொள் !

வள்ளலார் அளவு
வன்மை இல்லை
என் நாவில் !

பாரதி அளவு
பக்குவமில்லை
மனதில் !

ஆனால் உலக
மொழியரங்கில்
உன்னை உயர்த்திப்
பிடிக்கும் கரங்களில்
என் கரத்தையும்
இணைத்துக்கொள்ள
விரும்பும் உன்
இளைய மகன் நான் !

முத்தமிழே
உனக்கோர் வேண்டுகோள்;
மூச்சு நின்ற பின்னும்
கவி வடிவாய்
உன் புகழ் பாடும்
கவி மைந்தனாய்
உனக்குள் கரைத்திடு
என்னை ......!

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (12-Nov-16, 10:25 am)
பார்வை : 311

மேலே