குடியரசு தின வாழ்த்து

சுதந்திரம் வாங்கி ஆண்டுகள் பல கடந்தாலும்..
சுதந்திர மெங்கேயென்று தானின்றும் முழங்குவார்!

முடியரசென்ற காலம் முடிந்து விட்டநிலையில்..
குடியரசென்ற பொற்காலம் புதிதாய் முளைத்தது!

மன்னர் வைத்ததே சட்டமென்பதெல்லாம் மாறி..
மக்கள் நினைத்ததே பின்பு சட்டமாகிப்போனது!

அடிமை அரசாங்கம் என்பதெல்லாம் அகன்றது..
அரசியலமைப்புச் சட்டம் உள்ளே நுழைந்தது!

குடியரசுத் தலைவர் மக்களுக்கு நல்வழிகாட்ட..
வளர்ந்துவரும் வல்லரசே என உலகம் வாழ்த்த!

கையைப்பார்த்து எதிர் காலத்தைக் கணிக்காதே..
கை இல்லாதவனுக்கும் எதிர்காலம் உண்டென..

காலத்தால் மறவாத வார்த்தையை அப்துல்
கலாமவர் கனியும் சிந்தனையில் மொழிந்தார்.!

சுதந்திரம் குடியரசு என்கிற தினமுமிரண்டிலும்
இந்தியனெனும் உணர்வு எழுச்சி பெறவேண்டும்.!

ஏமாற்றமும் எதிர்பார்ப்பும் எந்நாளு மிருந்தாலும்..
என்றைக்கும் எழவேண்டும் தேசபக்தி உணர்வு!

தண்ணீரும் கண்ணீரும் வற்றி விட்டால்கூட..
தாய்மண்ணின் சிறப்பை மதிக்கக் கற்கவேண்டும்!

தண்ணீர்விட்டு வளர்த்த செடிபோல் சுதந்திரத்தை..
கண்ணீர்விட்டு நித்தம் கருத்தோடு காக்குமிந்த..

விழாவை வினிதேகொண்டாட நமக்குக் கட்டாய..
விடுமுறையும் கிடைத்ததை வீணாக்க வேணாம்!

தன்னம்பிக்கை யென்கிற அசையாத திடமான..
நம்பிக்கை வேண்டுமாம்! தன்னாட்டை மேம்படுத்த!


===========================================================
இந்தியக் குடிமக்களனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்..
===========================================================

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (26-Jan-17, 9:22 am)
பார்வை : 563

மேலே