பெங்களூரு பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு எது கவிதை கவிஞர் இரா இரவி

பெங்களூரு பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு !

எது கவிதை ? கவிஞர் இரா .இரவி !

எது கவிதை ? என்ற கேள்வி எல்லோரும்
என்றும் கேட்டுக் கொண்டே இருக்கின்றனர் !

விடை மட்டும் இன்றும் கிடைக்கவே இல்லை
வித்தியாசமாக எழுதி இருந்தால் கவிதையா ?

வளமான சொற்கள் இருந்தால் கவிதையா ?
வற்றாத கற்பனை இருந்தால் கவிதையா ?

மரபு இலக்கணத்துடன் இருந்தால் கவிதையா ?
மரபின்றி புதுமையாக இருந்தால் கவிதையா ?

மூன்றுவரி ஹைக்கூவாக இருந்தால் கவிதையா ?
முத்தாய்ப்பான வசனமாக இருந்தால் கவிதையா ?

உள்ளத்தில் உள்ளதை எழுதினால் கவிதையா ?
உணர்ந்த உணர்வை வடித்தால் கவிதையா ?

அழகியலை அழகாய்த் தீட்டினால் கவிதையா ?
அழகியின் அங்கம் வர்ணித்தால் கவிதையா ?

ஏழ்மைக்காக வருந்தி எழுதினால் கவிதையா ?
இன்னல்களை எடுத்து இயம்பினால் கவிதையா ?

தன்னம்பிக்கை விதை விதைத்தால் கவிதையா ?
தன்னிகரில்லா ஓசை நயம் இருந்தால் கவிதையா ?

துன்பத்திற்குத் தீர்வு கூறினால் கவிதையா ?
துயரத்திற்கு ஆறுதல் தந்தால் கவிதையா ?

காதலிக்குக் காதலன் வடித்தால் கவிதையா ?
காதலை உயர்வாய் காட்டினால் கவிதையா ?

மரபுக்கவிதையே கவிதை என்கின்றனர் சிலர் !
புதுக்கவிதையே கவிதை என்கின்றனர் சிலர் !

வசனக் கவிதையே கவிதை என்கின்றனர் சிலர் !
விவேகமான ஹைக்கூவே கவிதை என்கின்றனர் சிலர் !

கவிதையின் வடிவம் எதுவாக இருந்தால் என்ன ?
கவிதை வாசகர் சிந்தையைக் கவருவதாக இருத்தல் வேண்டும் !

எது கவிதை என்ற கேள்விகள் தொடர்ந்தாலும் !
எக்கவிதை வாசகர் உள்ளம் தொடுதோ அதுவே கவிதை !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (7-Feb-17, 8:13 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 59

மேலே