அம்மா நியாயமா

அம்மா இதுவும் நியாயமா - உன்
அடியனைப் படுத்துவ தாகுமா ?

சும்மா இருக்கும் சுகங்கேட்டேன் - ஒரு
. சோதிக் கவிதைத் திறன்கொடுத்தாய் !
இம்மா வுலகில் இடங்கேட்டேன் - உடன்
. இமயச் சிகரத்தில் இடங்கொடுத்தாய் !

பாடல் ஒன்றைத் தான்கேட்டேன் - அட
. பாடும் திறனை எனக்களித்தாய் !
தேடல் ஒன்றைத் தான்கேட்டேன் ! - எனைத்
. தேடித் திரியும் பதங்கொடுத்தாய் !

காய்ந்து கொள்ளக் கனல்கேட்டேன் - என்
. கண்களுக் குள்ளே சுடர்கொடுத்தாய் !
வேய்ந்த கூரை அதுகேட்டேன் - பெரு
. வெட்ட வெளிதனை ஏன்கொடுத்தாய் ?

நல்லோர் நிலையின் வழிகேட்டேன் - உள்
. நானெனும் ஆணவம் நீயழித்தாய் !
எல்லாம் மாற்றிக் கொடுப்பாயேல் - அருள்
. ஏறிடக் கேட்பேன் எதுகொடுப்பாய் ?

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (4-Jun-17, 2:39 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 67

மேலே