காகிதமே, என்னை உன் போல் ஆக்கிவிடு

காகிதமே எனக்கு ஒன்றைச் சொல்!

உன்னைப் பேனாவால் குத்தி எழுதுகிறேன்,
தவறு உன்னுடையது அல்ல என்று தெரிந்தும்,
உன்னைத்தான் கிழித்து குப்பையில் எறிகிறேன்!

மறுபடியும் எழுதுகிறேன்,
உன்னை மையால் நிரப்பிக் கொள்கிறாய்!

சுவைத்து பக்கத்தில் வைத்த காபி கவிழ,
அதையும் உறிஞ்சிக் கொள்கிறாய்!
குப்பையில் எறிகிறேன்,
இம்முறையும் உன் தவறு இல்லை!

எங்கள் ஊரில் மின்வெட்டு உண்டு,
உன் மேல் விழும்
பேனா மையும், என் வியர்வை துளியும்
இணைபிரியா நண்பர்கள்!
இரண்டையும் உறுஞ்சுகிராய்!
வட்டமாய் நனைந்த புள்ளிகளை,
என் கண்ணீர் என்று
அவள் தவறாக நினைத்துவிட்டால்?
காதல் கடிதம் அல்லவா?!
மறுபடியும் உன்னை குப்பையில் எறிகிறேன்!

செய்யாத தவறுக்கு
எத்தனை முறை எறியப்படுவாய்?

ஒன்று செய்!
என்னை உன் போல் ஆக்கிவிடு!
உன் குணம்தான் எனக்கும் வேண்டும்!

- ஒளி முருகவேள்

எழுதியவர் : ஒளி முருகவேள் (6-Jul-17, 5:53 pm)
சேர்த்தது : ஒளி முருகவேள்
பார்வை : 63

மேலே