முதியோர்

முதிர்ந்த கனிகளை காம்புகள் உலர்த்திவிடும்
முதிர்ந்த உயிர்களை உறவுகள் துரத்திவிடுமே!

தேன் சொட்டும் கரும்பின் சுவைதீர்ந்தால்
வீண் மட்டும் சக்கையாய் வீசிஎறிவாரே!

அம்புலி காட்டி அமுதூட்டும் கரங்கள்
அன்பிலா மாக்களிடம் வலியோடு ஏந்துவதோ!

வாரம் மாதம் வருடமென தாங்கியவள்
பாரம் ஒருநாள் வாழ்வதும் உன்னுடனே!

பிஞ்சி விரல்கள் தீண்ட சிலிர்த்தவள்
நஞ்சு வார்த்தைகளால் நாளும் துடித்தாளே!

மழலை சொல்லால் மதிமயங்கி நின்றவள்
நிழலை தீண்டவும் தகாதென சொல்கிறீர்களே!

பெற்றதை எல்லாம் இழந்து விட்டபின் - நீ
பெற்றதும் துணிந்ததே உனை இழந்துவிட!

உடல் சதையெல்லாம் உருகி போக
ஊண் எலும்பெலாம் குருகி போக
கண் இரண்டும் ஒளி இழந்து
செவி இரண்டும் மந்தம் அடைந்து

நடையிழந்து,
களையிழந்து,
ஒளியிழந்து,

ஓடென உழைத்தாய் அல்லும் பகலும்
பரிசென கிடைத்ததோ முதியோர் இல்லம்!

ஈன்றவர்கள் பசியோடு இங்கிருக்க
ஈமச்சடங்குகள் எல்லாம் விளம்பரமே!

உயிருடன் இருந்தால் வராத உறவெலாம்
பிரிந்தபின் படைசூழ நிற்ப தென்னவோ!

அனாதை பிணமாக எரியூட்டபட்ட சடலம்
அன்னையை கைவிட்ட ஈனப்பிறவியின் சாபமே!

முதுமை அடையா உயிர்கள் இல்லை
இளமையின் ஊற்று தீரும் ஓர்நாள்
செய்தவை எவையோ தப்பாது உனைசேரும்
காலன் கணக்கிதை கருத்தினில் நிறுத்து.

முதுமையின் கொடுமை தனிமை
ஆதலால் அன்பு செய்வதே நம்கடமை!

எழுதியவர் : ஜித்து (8-Oct-17, 2:17 pm)
Tanglish : muthiyor
பார்வை : 5014

மேலே