முதுமொழிக் காஞ்சி 43
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஈரமில் லாதது கிளைநட் பன்று. 3
- அல்லபத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால் மனத்தின்கண் ஈரமில்லாததுகிளையுமன்று நட்புமன்று.
பதவுரை:
ஈரம் இல்லாதது - மனத்தில் அன்பில்லாதது, கிளை (அன்று) - சுற்றமுமன்று;
நட்பு அன்று -சினேகமும் அன்று.
உறவினர்க்கும் நட்பினர்க்கும் அன்புடைமை உரிய லட்சணம்.
உள்ளன்பிலாதார் சுற்றத்தாருமாகார், நட்பினரும் ஆகார் என்பதாம்.
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவுந் தரும். 522 சுற்றந்தழால்
ஒருவனுக்கு அன்பு நீங்காத சுற்றம் மட்டும் அமைந்து விடுமானால், அவனுக்கு அது வளர்ச்சி குறையாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும். '
அழிவந்த செய்யினும் அன்பறார், அன்பின்
வழிவந்த கேண்மை யவர். 807 பழைமை
அன்புடன் தொன்றுதொட்டு வந்த உறவை உடையவர், அழிவுதரும் செயல்களை பழகியவர் செய்த போதிலும் தம் அன்பு நீங்காமலிருப்பர்.