காதற்சுவையில் கவினுறும் இலக்கியங்கள்

சங்ககால இலக்கியத்தில் பேசப் பட்டத்
***தகைமையுடன் திகழ்ந்ததிந்த உண்மைக் காதல் !
சிங்கமெனக் கம்பீர நடையைக் கொண்ட
***சேரமன்னன் ஆட்டனத்தி அழகில் சொக்கி
மங்காத புகழுடைய கரிகால் சோழன்
***மகளான ஆதிமந்தி மையல் கொண்டாள் !
பொங்கிவரும் ஊற்றாகக் கவிதை பாடும்
***புலமையொடு நாட்டியமும் கற்றி ருந்தாள் !!

ஆட்டனத்தி கழார்த்துறையில் நடன மாட
***அவனுடனே காவிரியு மிணைந்தே ஆட
நாட்டமிகக் கொண்டவளும் கூந்தல் தன்னில்
***நாசுக்காய் மறைத்துள்ளே இட்டுச் செல்லக்
கூட்டத்தார் கண்முன்னே ஆற்றுள் போனாள்
***கோமானும் ஒதுங்கினனே கரையி னோரம் !
மீட்டவனைக் காப்பாற்றி மருதி யென்பாள்
***வேந்தனுடன் வாழ்ந்துவந்தாள் அன்பு கொண்டே !!

காதலனைக் கண்டீரோ என்று கேட்டுக்
***கண்ணீரோ டூரூராய் அலைந்தாள் ஆதி !
வேதனையால் பேதுற்றுப் புலம்பிப் பொங்கி
***மெல்லியலாள் வழிநெடுகத் தேடி னாளே !
பேதையவள் உருக்குலைந்து மயக்க முற்றுப்
***பிதற்றியதை மருதியுந்தான் கண்டு கேட்டாள் !
மாதரசி தன்னிணையை ஒப்ப டைத்தாள்
***வலிமிகவே தனைக்கடலுள் மாய்த்துக் கொண்டாள் !!

உண்மையானக் காதலுக்குத் தோல்வி யில்லை
***எடுத்தியம்பும் இக்கதையில் வஞ்ச மில்லை
கண்மணியாய்க் காத்திருத்து விட்டுத் தந்த
***கற்பரசி மருதிக்கு மீடே யில்லை
வண்டமிழில் இலக்கியங்கள் காட்டு மிந்த
***மகத்தான காதலிலே அழகும் அள்ளும் !
எண்ணற்ற கவின்காதல் கதைகள் கொண்ட
***இலக்கியங்கள் நிலைத்திருக்கும் நெஞ்சில் நன்றே !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Mar-18, 10:49 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 210

மேலே