புதுமைப் பூக்கள்

புதுமைப் பூக்கள் பூக்கட்டுமே –இப்
பூமியில் புரட்சி வெடிக்கட்டுமே!
பதுங்கிய கொடுமை அழியட்டுமே –இப்
பாரதப் பூமியும் விழிக்கட்டுமே !

மதமது ‘மதம்’ என புரியட்டுமே –அதை
மானுட இனமது உணரட்டுமே !
உதவா மதங்கள் ஒழியட்டுமே –அதன்
உண்மை எதுவென தெளியட்டுமே !

பாலிய கொடுமைகள் நிற்கட்டுமே –நல்
பண்பினை நாளும் வளர்க்கட்டுமே !
வேலியை பயிரை மேயாமல் –அதை
விருப்புடன் காத்திட பழகட்டுமே !

சாதிய வெறியது தணியட்டுமே –தினம்
சாந்தி எங்கும் நிலைக்கட்டுமே !
மோதிய கூட்டம் பணியட்டுமே –அதில்
மானுடம் வென்று மகிழட்டுமே !

புதிய சிந்தனை பிறக்கட்டுமே –அதன்
போர்வாள் பகையை ஒழிக்கட்டுமே !
புதிய பொழுதும் விடியட்டுமே –அதில்
பொல்லார் தொல்லையும் மடியட்டுமே !

மதுவெனும் அரக்கன் இறக்கட்டுமே –குடி
மக்கள் மாறியே சிறக்கட்டுமே !
ஒதுங்கிய மக்கள் யாவருமே –ஒரு
அணியினில் திரண்டு உயரட்டுமே !

போலிச் சாமிகள் போகட்டுமே –அவர்
பொய்களும் மண்ணாய் ஆகட்டுமே !
நீலிக் கண்ணீர் வடிப்போரும் –தன்
நெஞ்சின் நீதிக்குப் பணியட்டுமே !

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (30-Apr-18, 6:09 pm)
பார்வை : 159

மேலே