நிழலின் பிம்பம்
பருந்தின் கண்களுக்கு தப்பிப் பிழைத்த
பறவையொன்று சிறு நிழலில் கண்ணயர்கிறது...
உச்சி வானில் சிறகடிக்கும் பருந்தின் பார்வைக்கு
தற்போது புலப்படப் போவதில்லை என்ற நம்பிக்கையில்
சிறகுகளை அணைத்தவாறு உறங்குகிறது அப்பறவை...
எனினும் இந்த நிழல்...
நிழல் பாதுகாப்பானதா..
பசிக்கு திருடி பாறையின் பின்னால் ஒளிந்தவனை
பல நேரங்களில் காட்டிக்கொடுப்பது இந்த நிழல்தானே...
முன்னாளில் நிழல் போல் நின்றவர்கள் பின்னாளில்
துரோகம் இழைத்த வரலாறு பலவுண்டு...
அவற்றை இப்பறவை அறிந்திருக்குமா...
நீண்டு குறுகிய நிழலின் இப்பகுதி இயற்கையின் எப்பரப்பு..
வளைந்து விரிந்த நிழலின் இந்த பாகம் எந்த உயிரியினுடையது...
மயிர்கூச்செறிய..சிந்தையில் ஒரு எண்ணம்...
எனினும் ஒருவேளை இது அப்பருந்தின் நிழலா..!
-வித்யா சிவலிங்கம்