முகம் தொலைத்த பூமி

முதற்கல்லை எறியும்
ஆணை வந்ததும்
எல்லோரும் குனிந்து
தமக்கான கல்லை
பொறுக்கத் தொடங்கினர்

ஆண்டவர் அதிர்ந்தார்.

'என்ன...
எல்லோரும் புனிதரா இங்கு?'

நெருங்கி நோக்கினார்.

அத்தனையும்
புனித முகமூடிகள்...
அக அழுக்குகளின்
அடிச்சுவடு மறைத்து
வண்ண வண்ண
சாயம் பூசி
நாட்கணக்கில்
நகாசு செய்து
அசலை விஞ்சிய
அழகு முகமூடிகள்

ஆண்டவரே கொஞ்சம்
மயங்கித்தான் போனார்

முகம் மறந்த
முகமூடிகள் கூட்டம்
குற்றம் சுட்டி ஆர்ப்பரித்தது

ஆண்டவர் அவளிடம் சொன்னார்:
'முகம் தொலைத்த பூமியில்
முகங்காட்டும் நீ நிர்வாணி;
நீயுமொரு புனித முகமூடி தரி
உன் பாவங்கள் மறைக்கப்படலாம்'.

- சுப்ரமண்ய செல்வா -

எழுதியவர் : சுப்ரமண்ய செல்வா (31-Aug-18, 7:18 pm)
சேர்த்தது : சுப்ரமண்ய செல்வா
பார்வை : 156

மேலே