புதிய கண்டுபிடிப்புகளின் பலன்கள் மக்களை சென்றடைய வேண்டும் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதிய கண்டுபிடிப்புகளின் பலன்களை மக்களை சென்றடைய வேண்டும். இதில் உள்ள தடைகளை உடைத்தெறிய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பிரதமரின் அறிவியல் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு உறுப்பினர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

அப்போது பிரதமர் பேசியதாவது: அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் பலன்கள் சாமானிய மக்களை சென்றடைய வேண்டும். மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதுடன், அவர்களின் வாழ்க்கையை எளிதாக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்கள், ஆய்வகங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசின் பல்வேறு துறைகள் இடையே வலுவான தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும். கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களிலேயே புதிய கண்டுபிடிப்புகள் தேங்கிவிடக் கூடாது. இதில் உள்ள தடைகளை உடைத்தெறிய வேண்டும்.

பள்ளி மாணவர்களிடையே அறிவியல் திறமைகளை அடையாளம் கண்டு அதை வளர்ப்பதற்கான வழிகளை மேம்படுத்த வேண்டும். மாவட்ட மற்றும் பிராந்திய அளவிலான அடல் ஆய்வகங்களுடன் இணைப்பு ஏற்படுத்த வேண்டும். வேளாண் வருமானத்தை அதிகரிப்பது, நாள்பட்ட மற்றும் மரபணு நோய்களுக்கு தீர்வு, கழிவுப் பொருட்கள் மேலாண்மை, இணையதள பாதுகாப்பு போன்றவற்றுக்கு ஆய்வில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜய் ராகவன் மற்றும் உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

முன்னதாக, அறிவியல் தொழில்நுட்ப துறைகளில் ஆய்வுகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் உறுப்பினர்கள் எடுத்துக் கூறினர்.

எழுதியவர் : (14-Nov-18, 10:58 pm)
பார்வை : 40

சிறந்த கட்டுரைகள்

மேலே